பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திறிந்த பறவைகளே... ரீவைண்ட் செய்த ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் படித்த நண்பர்களை சந்தித்து பேசியதுடன், தாம் படித்த பள்ளியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தனது நேரத்தை செலவிட்டார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகிய நேரத்திலும் கூலாக தனது நண்பர்களுடன் பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோட்டார்.
அவருடன் படித்தவர்கள் பலர் தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் உயர் பதவிகளில் இருந்து விட்டு தற்போது ஓய்வில் இருக்கின்றனர்.

50 ஆண்டுகாலம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படித்தார். 1970-ல் தன்னுடன் 11-ம் வகுப்பு படித்த மாணவர்களை இன்று சந்தித்த ஸ்டாலின், பள்ளிக்கால பசுமையான நினைவுகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வகுப்பறை
மேலும், தாம் பயின்ற வகுப்பறையில் நண்பர்களுடன் அமர்ந்து தனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் பற்றி நினைவு கூர்ந்தார் ஸ்டாலின். மேலும், தாம் ஓடி ஆடி விளையாடிய பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் தனது நேரத்தை செலவழித்த அவர் நண்பர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.

எளிமை
இதனிடையே மு.க.ஸ்டாலின் பள்ளிப்பருவத்தில் எந்த ஒரு பெருமையுமின்றி மிகவும் அமைதியாகவும், எளிமையாகவும் இருப்பார் என அவரை பற்றி கூறினர் அவரது நண்பர்கள். கருணாநிதியின் மகன் என்பதை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளாமல் மற்ற மாணவர்களுடன் சகஜமாக கலந்து பேசுவார் எனத் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு
மு.க.ஸ்டாலினுடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்தவர்களில் பலர் உயர் பதவிகளில் இருந்துவிட்டு இப்போது ஓய்வுகாலத்தில் உள்ளனர். அவர்கள் ஸ்டாலினை பற்றி மேலும் கூறியதாவது, பள்ளி பருவத்திலேயே ஸ்டாலினிடம் அரசியல் ஆர்வம் இருந்ததாக கூறியுள்ளனர். மொத்தத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில், ரத்த திலகம் திரைப்படத்தில் வரும் பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திறிந்த பறவைகளே...என்ற பாடலை அனைவரும் ரீவைண்ட் செய்தனர்.












Click it and Unblock the Notifications