களையிழந்து காணப்பட்ட ஸ்டாலின் இல்லம்... நிர்வாகிகள் சந்திக்க அனுமதி மறுப்பு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் என்ற போதும் அவரை சந்திக்க நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.
காரணம், திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மிக மிக கவலைக்கிடமான சூழலில் மருத்துவமனையில் உள்ளதால் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முழுவதுமாக தவிர்த்துவிட்டார் ஸ்டாலின்.
தன்னை சந்திக்க வர வேண்டாம் என ஏற்கனவே அறிக்கை வெளியிட்டும், ஆர்வக்கோளாறில் ஒரு சில நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்காக அவரது இல்லத்துக்கு சென்றனர்.

நிகழ்ச்சிகள் ரத்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்துச்சொல்ல வருகை தந்த நிர்வாகிகளை அவர் சந்திக்க மறுத்துவிட்டார். திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியும், திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதால் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என நேற்று முன் தினம் அறிக்கை மூலம் அறிவித்திருந்தார் ஸ்டாலின். அப்படியிருந்தும் நிர்வாகிகள் அதை கேட்டதாக தெரியவில்லை. ஸ்டாலினை சந்தித்து விடவேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் ஒரு சிலர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

2-வது ஆண்டு
திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் இன்னும் தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடவில்லை. கடந்த ஆண்டு 2019 மார்ச் மாதத்தை பொறுத்தவரை கருணாநிதி மறைந்து ஓராண்டு கூட நிறைவடையாததால் அப்போது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இந்தாண்டு அன்பழகன் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஸ்டாலின் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ளதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வெறிச்சோடி
மார்ச் 1- என்றாலே சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லம் களைகட்டும். வீட்டிற்கு உறவினர்கள் வருகை, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மதிய விருந்து, தொண்டர்கள் வாழ்த்து என உற்சாகத்துடன் காணப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ள பகுதி அவரது பிறந்தநாளன்று வெறிச்சோடியே காணப்பட்டன. பகுதிச் செயலாளர்கள் ஒரு சிலர் சென்னை வீதிகளில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனிடையே தனது தாயார் தயாளு அம்மாளிடம் மட்டும் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

கொடியேற்றம்
இதனிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் அன்னதானம், மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நிர்வாகிகள் செய்தனர். மாவட்டதலைநகரங்களில் திமுக கொடியை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஏற்றி வைத்தனர். , பேராசிரியர் அன்பழகன் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் மாவட்டச் செயலாளர்கள் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications