ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள்.... மு.க. ஸ்டாலின் அறிக்கை
Recommended Video

சென்னை: ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள் அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, உயர் கல்வித்துறை செயலாளரை கைது செய்ய வேண்டும் என்ற இருபெரும் உத்தரவு மூலம் அதிமுக அரசு நிர்வாகத்தின் அலங்கோலத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: "திறமை மிக்க தலைமையின் கீழ் முதலமைச்சர் இந்த அரசை வழி நடத்தி வருகிறார்" என்று ஆளுநர் தமிழக சட்டமன்றத்தில் அரசாங்கத்தின் செயற்கையான உரையை வாசித்து அதன் ஈரம் காய்வதற்குள் வெளிவந்துள்ள உயர்நீதிமன்ற உத்தரவும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பும் அதிமுக ஆட்சி நிர்வாகத்தின் அருவருப்பான வெட்கக்கேடான அலங்கோலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

ஆளுநரின் பாராமுக நிலைப்பாடு
"குட்கா ஊழலில் சம்மன் அனுப்பி விசாரித்தாலும் அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய மாட்டேன்" "டி.ஜி.பி. வீட்டிலேயே சி.பி.ஐ. ரெய்டு நடத்தினாலும் டி.ஜி.பி.யை பதவியில் வைத்து பாதுகாப்பேன்" என்ற முதலமைச்சர் பழனிச்சாமியின் அதிகார துஷ்பிரயோக மனப்பான்மையும், தார்மீகப் பொறுப்பற்ற செயலும், "தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சந்தி சிரித்தால் நமக்கென்ன" என்று அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆளுநரின் பாராமுக நிலைப்பாடும், தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடுகளை ஏற்படுத்தியிருப்பதுடன்- மாநில அரசின் நிர்வாக இயந்திரம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நிலைகுலைந்து- தோல்வியின் உச்சி முகட்டிற்கு சென்று விட்ட அவலத்தை அரங்கேற்றியுள்ளது.
|
கடும் கண்டனம்
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பதவியேற்றுக் கொண்ட முதலமைச்சரும், அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆளுநரும் தங்களது தலையாய கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து-அரசியல் சட்டத்தை தமிழகத் தெருக்களில் அனாதையாக அலைய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நடவடிக்கை வேண்டும்
உயர் நீதிமன்றமே கைது செய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வித் துறைச் செயலாளரை அப்பதவியில் நீடிக்க அனுமதிப்பது ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய கல்வித்துறைக்கு பேரிழுக்கு என்பதால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமைச்சரவையின் புனிதம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதை செய்யத் தவறினால், ஆளுநர் தலையிட்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சி.பி.ஐ. முன்பு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், சி.பி.ஐ. ரெய்டுக்குள்ளான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உள்பட அத்தனை பேரையும் நீக்கி, தடம் மாறி தடுமாறிக் கொண்டிருக்கும் மாநில அரசு நிர்வாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், மக்களாட்சி மாண்பின் சிகரமாகத் திகழ வேண்டிய அமைச்சரவையின் புனிதத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications