2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டார் ஸ்டாலின்... நாளை கருணாநிதி சிலைதிறப்பு விழா
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டுச் சென்றுள்ளார். கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
அந்தமான் செல்வதற்காக அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவரை தாமோ அன்பரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று முதல்வர் உரை உள்ள நிலையில் அதனை ஸ்டாலின் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பேச்சால் கடுப்பான ஈரான்.. அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல்.. பகீர்!
2 நாள் பயணம்
அந்தமான் திமுக சார்பில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்பட்டுள்ளதால் அதனை திறந்து வைப்பதற்காக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தமான் சென்றுள்ளார். மேலும், அந்தமான் திமுக நிர்வாகி இல்லத் திருமணத்தை நடத்தி வைப்பதோடு அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் உரை நிகழ்த்த உள்ளார்.
திமுகவினர்
முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலினை, தாமோ அன்பரசன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் வழியனுப்பி வைத்தனர். இன்று சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாள் என்பதால் முதல் உரை நிகழ்த்துகிறார். அதில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதனை புறக்கணித்துள்ளார்.
ஊரெங்கும்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை தமிழகத்தின் பல பகுதிகளில் திறந்து வைத்து வரும் ஸ்டாலின், முதல்முறையாக தீவு பிரதேசத்திலும் திறந்து வைக்கிறார். அந்தமானில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலை தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில்
அந்தமானுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கருணாநிதியின் சிலையை காணும் போது அவருடைய பெருமைகளை அறிந்துகொள்ளும் வண்ணம் கல்வெட்டும் வைக்கப்படவுள்ளது. இதனிடையே தற்போதைய நிலையில் கருணாநிதியின் பொன்மொழிகள் மட்டும் அவரது சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.