திமுகவினர் கூடிக் கலையும் காகங்கள் அல்ல... கூடிப் பொழியும் மேகங்கள் -மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: திமுகவின் விழாக்களும், மாநாடுகளும் கூடிக் கலையும் காகங்களாக இல்லாமல் கூடிப் பொழியும் மேகங்களாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 9-ம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் காணொலியில் கூடுவோம், கொள்கை கீதம் பாடுவோம் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது;

வணக்கம்
அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
இது ‘முப்பெரும் விழா' மாதம்! ‘பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார்- தமிழரின் தன்மானம் காத்த பேரறிஞர் அண்ணா; இருவரும் பிறந்த மாதம். பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு - தலைவர் கலைஞர் அவர்களால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட மாதம். இந்த மூன்று விழாக்களையும் ஒன்றிணைத்து ‘முப்பெரும் விழா'வாகக் கொண்டாடும் பாங்கை நமக்கு வழங்கியவர், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.

திமுக விழாக்கள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழாக்களும் மாநாடுகளும், கூடிக் கலைவதற்கானவைகளல்ல. அவை, "கூடிக் கலையும் காகங்கள் அல்ல; கூடிப் பொழியும் மேகங்கள்". அங்கே கொள்கை முழக்கங்கள் எதிரொலிக்கும் . அவை, தமிழ்நாட்டு மக்களின் தன்மானத்தையும், தனிப்பெரும் முன்னேற்றத்தையும், நலனையும், காக்கும் அறப்போர்க் களத்திற்கு ஆயத்தம் செய்பவை.

தேனடை போல்
சென்னை - அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கத்தில்', தேனடை போல் கூடும் உங்கள் திருமுகங்களைக் காண்பது வழக்கம். ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது ஏற்படும், இயக்கம் எனும் குடும்பப் பாச உணர்வுக்கு இணையே இருக்காது. அத்தகைய உணர்வுகள் பரவிடும் வாய்ப்பை, இந்தக் கொரோனா காலம் நமக்கு வழங்கிடவில்லை. அதனால், கழகத்தின் நீண்ட வரலாற்றில் முதன்முறையாகக் காணொலி மூலம் கழகத்தின் பொதுக்குழு நடைபெறவிருக்கிறது.

நாட்டு நலன்
ஊரடங்கு நடைமுறைக்கு வந்த மார்ச் மாதத்திலிருந்தே கழக உடன்பிறப்புகளை, காணொலி வாயிலாகத் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சி கொண்டு வருகிறேன். நாள்தோறும் நாட்டு நலன் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றும் கழகத்தின் பணிகளை, மேலும் பரவலாக்கிடவும், அதற்கேற்ற கட்டமைப்பை வலுப்படுத்திடவும், கலந்தாலோசனைகளை மேற்கொண்டிட, கழகப் பொதுக்குழு காணொலியில் கூடுகிறது.

பொதுச்செயலாளர்
நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் கொள்கைச் சகோதரனாகத் தோளோடு தோள் நின்று, கழகத்தின் பொதுச்செயலாளராக நெடுங்காலம் பணியாற்றி இயக்கம் வளர்த்த, இனமானப் பேராசிரியர் அவர்களின் மறைவுக்குப் பிறகு, பொதுச்செயலாளர் பொறுப்புக்கு நமது பேரன்புக்குரிய அண்ணன்- கழகத்தின் மூத்த முன்னோடி- பேரறிஞர் அண்ணா அவர்களின் பாசத்திற்குப் பாத்திரமான - தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கு நெருக்கமான - துரைமுருகன் அவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்.

டி.ஆர்.பாலு
அதுபோலவே, நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும், உங்களில் ஒருவனான நானும், மதிப்பிற்குரிய சாதிக் அவர்கள், ஆற்காட்டார் அவர்கள் ஆகியோரும் வகித்திட்ட பொருளாளர் பொறுப்புக்கு, கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் - முத்தமிழறிஞர் கலைஞரின் பட்டாளத்துச் சிப்பாயாகச் சிறப்புறச் செயலாற்றும் ஆற்றல் வீரர் - அன்புச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் விண்ணப்பித்திருக்கிறார். கழகப் பொதுக்குழுவில் இதற்கான ஒப்புதலை முறைப்படி பெற்ற பிறகு, அவர்கள் இருவரும் இந்தப் பொறுப்புகளை ஏற்கும் இனிய தருணம் நிகழவிருக்கிறது.

ஜனநாயகம்
கழகப் பொதுக்குழு என்பது, உள்கட்சி ஜனநாயகத்திற்கான உயர்ந்த உரைகல். கழக வளர்ச்சிக்கு, ஆக்கப்பூர்வமான-ஆணித்தரமான கருத்துகளைப் பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்துரைக்கும் வாய்ப்பினை பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் வழங்கினார்கள். அவர்தம் அடிச்சுவட்டில், காணொலி பொதுக்குழுவிலும், கழகத்தின் உண்மையான - உறுதியான வளர்ச்சிக்கேற்ற, பொலிவும் பொருத்தமும் வாய்ந்த கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications