தேர்வு முறைகேடு அலர்ஜியில் உள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்... ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பாய்ச்சல்
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் சி.பி.ஐ. யிடம் போய் விடுமோ என்ற அலர்ஜியில் உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
வேளாண் மண்டலம் விவகாரத்தில் திமுக மீதோ, மு.க.ஸ்டாலின் மீதோ குற்றஞ்சாட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வீண்பழி
"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக திமுக தலைவர் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்"என்று அமைச்சர் திரு ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் சந்தேகங்கள் உள்ளன என்பதை முதன் முதலில் அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொண்டுள்ளார்.ஆனாலும் வழக்கம் போல் தி.மு.கவை வம்பு இழுக்கும் நோக்கில் சில வீண் பழிகளை தனது அறிக்கையில் அமைச்சர் சுமத்தியுள்ளார்.
உளறல்
பாவம், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் சி.பி.ஐ. யிடம் போய் விடுமோ என்ற அலர்ஜியில், திமுக தலைவர் மீது "மீத்தேன் திட்டம் குறித்து"ஏதோ உளறிக் கொட்டியிருக்கிறார். எங்கள் கழகத் தலைவர் மட்டுமின்றி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே அத்திட்டம் குறித்து விளக்கப்பட்டு விட்டது. இதை ஏதோ அதிமுக எதிர்த்தது போல் திரு ஜெயக்குமார் கூறியிருந்தாலும், முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களே இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வத்துடன் பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்ற செய்தியையும் வசதியாக மறந்து விட்டார்.
கேள்வி
அமைச்சர் ஜெயக்குமாரால் மத்திய அரசுக்கு எடுத்துச் சென்ற முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கூட சொல்ல முடியவில்லை. அந்தக் கடிதம் வேளாண் மண்டலம் தொடர்புடையதா? அல்லது "சொந்த விஷயங்களுக்காக"கொடுக்கப்பட்ட கடிதமா? பொதுப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் வெளியிடத் தயங்குவது ஏன்?
மரண அடி
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக பல அராஜகங்களையும் நிகழ்த்தி விட்டு- பசுத்தோல் போர்த்திய புலி போல் இப்போது புதிய வேஷம் கட்டி வந்து நிற்பது ஏன்? உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்கு கொடுக்கப்பட்ட மரண அடிதானே? அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே மரண அடி தொடரப் போகிறது என்பதற்குத்தானே இப்போது புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
எச்சரிக்கை
விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டம் முறைப்படி நிறைவேற்றப்பட்டால் அதை ஆதரிக்கும் முதல் நபராக எங்கள் தலைவராகத்தான் இருப்பார். அதே நேரத்தில் விவசாயிகளை ஏமாற்ற அதிமுக அரசு முயற்சி செய்தால் அதை முதலில் - துணிச்சலுடனும்- சுயமரியாதையுடனும் எதிர்ப்பதும் எங்கள் தலைவராகத்தான் இருப்பார் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.