“முதலமைச்சர் வாயை திறந்தாலே பொய்.. தமிழ்நாட்டை நரகமாக்கியது போதும்”- NDA கூட்டத்தில் அன்புமணி பேச்சு
சென்னை: "திமுக அரசு என்றாலே ஊழல் ஆட்சி. 5 ஆண்டுகளில் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை. திமுக ஆட்சியின் முடிவு இன்று தொடங்குகிறது" என பாமக தலைவர் அன்புமணி இன்று மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், "2047 இல் இந்தியாவை வல்லரசாக மாற்ற அழைத்துச் செல்பவர் பிரதமர் நரேந்திர மோடி. திமுக ஆட்சிக்கான முடிவின் தொடக்கம் இந்த நாள். ஐந்தாண்டுகளில் பல விஷயத்தில் திமுக அரசு பூஜ்ஜியம் அரசு. ஜீரோ கவர்மெண்ட். ஜீரோ கவர்னன்ஸ். தகுதியற்ற அரசு.. ஊழல் அரசு.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்வளத் திட்டம் பூஜ்ஜியம், மருத்துவ கல்லூரி பூஜ்ஜியம். புதிய மின் திட்டம் பூஜ்ஜியம். இப்படி எல்லாவற்றிலும் பூஜ்ஜியம். பூஜ்ஜிய அரசு.. ஊழல் என்றாலே அதற்கு மறுபெயர் திமுக அரசு.
தகுதி, திறமை, நேர்மை இல்லாதது தி.மு.க ஆனால், ஊழலில் மட்டும் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தி.மு.க உள்ளது. மணல் கொள்ளை, நகராட்சி துறையில் ஊழல், பணியிட மாற்றத்தில் ஊழல், டாஸ்மாக் ஊழல், வரி ஏய்ப்பில் ஊழல், கனிம ஊழல், நெல் கொள்முதலில் ஊழல் என இப்படி ஒவ்வொரு துறையிலும் ஊழல். இப்படி, ரூ.6 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். இவர்களை துரத்தி அடியுங்கள்.
முதலமைச்சர் வாயை திறந்தாலே பொய். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி பண்ணுவோம் என்று பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தமிழ்நாட்டை நரகமாக்கியது போதும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 13 சதவீதம்தான். இது வெட்கக்கேடு. பரீட்சையில் 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் பாஸ். 13 மார்க் எடுத்தால் பெயில். அப்படி பார்த்தால், ஃபெயிலான கட்சி தி.மு.க.
தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் ரத்து, கூட்டுறவுக் கடன் ரத்து என்று எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டார்கள். நேற்று கூட, ரூ.12 லட்சத்து 16 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வநந்துவிட்டதாக மிகப்பெரிய பொய்யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். உண்மையில் வந்தது ரூ.1 லட்சம் கோடிதான்.
தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள். இளைஞர்களை அழித்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க.வை அகற்றுங்கள். அனைத்து கிராமங்களிலும் போதைப் பொருள்கள் கிடைக்கின்றன, 66 % வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளது, திமுக அரசு ஊழலில் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது, திமுக ஆட்சியை அகற்றுங்கள். இன்னும் 2 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications