சொந்தமா சரக்கு இல்ல.. பதவிக்காக தரை லோக்கலா ‘பல்டி’ அடிக்கிறாரே பிரதமர் மோடி.. விளாசும் திமுக!
சென்னை: திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்து பிரதமர் மோடி பேசிய நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளது திமுக.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு புகழாரம் சூட்டிப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி கட்சிகள், நாட்டை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கடுமையாக விமர்சித்தார். அதிமுக உடனான பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் அதிமுக தலைவர்களை புகழ்ந்து பிரதமர் மோடி பேசியது அரசியல் அரங்கில் விவாதமாகியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடிக்கு, அவர் 2014 மற்றும் 2016ல் பேசியதைச் சுட்டிக்காட்டி பதில் கொடுத்துள்ளது திமுக. இதுதொடர்பாக திமுக பொருளாளர் டிஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர்.
பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் ஜெயலலிதா. நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் பெங்களூர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாகப் பிரதமர் பேசியிருப்பதைப் பார்த்துத் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.
மோடி நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதே என்று கேலி செய்கிறார்கள். "பதவிக்காக எந்தளவுக்குத் தரைக்கு இறங்கிவிட்டார் பிரதமர்" என்று கிண்டல் அடிக்கிறார்கள். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி, 'தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது' என ஓசூரில் நின்று கடுமையாக விமர்சித்த மோடிதான், இன்றைக்குப் பல்லடத்தில் பல்டி அடித்திருக்கிறார்.
2014-ஆம் ஆண்டு தன்னை குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி நாயகனாகக் காட்டிக் கொண்ட நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது, தமிழ்நாட்டைவிட குஜராத் எந்த வகையில் வளர்ந்துவிட்டது என்று சொல்லி, 'மோடியா? இந்த லேடியா?' என்று கேட்டவர் ஜெயலலிதா. அத்தகைய மோடி இன்று ஜெயலலிதாவைப் புகழ்வதைப் பார்த்து என்ன சொல்வது? ஜெயலலிதாவை வைத்து, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி. அவரிடம் சொந்தச் சரக்கு ஏதுமில்லை என்பதற்கு இதுவே சான்று." என விமர்சித்துள்ளார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு.












Click it and Unblock the Notifications