"பழைய பழனிச்சாமினு நினைச்சிக்கிட்டீங்களா, மோடி அவர்களே”னு சொல்லிப் பாருங்க! ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
சென்னை : "பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே" என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், மோடி அவர்களே"னு சொல்ல முடியுமா என ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட போது மேடையில் மிகவும் ஆவேசமாக பேசினார் .அப்போது தமிழக முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
மேலும் என்னை பழைய பழனிச்சாமி என நினைத்தீர்களா என மிகவும் ஆவேசமாக பேசினார். அதிமுகவை அழிக்கலாம் என நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என மிகவும் கடுமையாகப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்காக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்' எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். "பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே" என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார். அவர்களின் கட்சியில் வான(க)ரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது, திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல.

ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
அந்தக் கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தி.மு.க.வை எதிர்த்துதான் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. நீதிக்கு எதிரானது அநீதி. நியாயத்திற்கு எதிரானது அநியாயம். யோக்கியனுக்கு எதிரானவன் அயோக்கியன். அதுபோலத்தான் தி.மு.க.வுக்கு எதிரான இயக்கம் அ.தி.மு.க! தி.மு.க. என்பது திராவிடக் கொள்கைகளை நிலைநிறுத்துகிற இயக்கம். அந்தத் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அது 'அ'.தி.மு.க. என்று அப்போதே சொன்னவர் முத்தமிழறிஞர் கலைஞர். இப்போதும் அதைத்தான் பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு? பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்? பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார்; புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார்.

பழைய கூவத்தூர்
பழைய கூவத்தூர் பழனிசாமி சசிகலாவின் கால்களை நோக்கித் தவழ்ந்தார்; புது வானகரப் பழனிசாமி, தரையில் தவழ்ந்து - கரன்சிகளைக் கொட்டிக் கொல்லைப்புறமாக நுழைந்துப் பெற்ற பதவியால் கொள்ளையடித்தப் பணத்தை, தனக்குத் தானே முடிசூட்டிக்கொள்ள வாரி இறைக்கிறார். "இதில் நடக்காது ஸ்டாலின் அவர்களே" என்று வெற்று வீராப்பு வசனம் வேறு! நடக்காது என்கிறீர்களே, நீங்கள் எப்போது நடந்தீர்கள் பழனிசாமி? கீழே குனிந்து, மேஜைக்கடியில் கால்களைத் தேடி, தரையில் தவழ்ந்து, நெடுஞ்சாண்க்கிடையாக சரணாகதி அடைந்து பதவியைப் பெற்றவர் என்பதுதானே உங்கள் வரலாறு! வழக்குகள் போட்டு தி.மு.க. பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித் துறை - அமலாக்கத்துறை - சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா?

பா.ஜ.க. அரசு
இப்போதுகூட அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே? பொதுக்குழுவில் தி.மு.க.வை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உண்டா? தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக்காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர்தான் பழனிசாமி. இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்?

பழைய பழனிச்சாமி நினைச்சீங்களா?
முத்துக்கு முத்தாக - ‘சொத்துக்குச் சொத்தாக' என்பதுபோல ஒன்றுக்குள் ஒன்றான குடும்ப உறவுகள் மூலம் அரசாங்கத்தின் கஜானாவை சுரண்டிக் கொழுப்பதற்காக பழனிசாமி ஆட்சியில் ஒப்பந்தங்களைப் பெற்றவர்கள்தானே? அவர்கள் மூலமாக உங்கள் ஆட்சியில் எப்படி அரசுப் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் டெல்லி எஜமானர்களின் நிர்வாகத்தில் உள்ள வருமான வரித்துறை சோதனை நடத்தி வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கே ஒரே ஒரு வார்த்தை, "பழைய பழனிச்சாமினு நினைச்சிக்கிட்டீங்களா, மோடி அவர்களே" என்று பேசிப் பாருங்களேன். உங்களின் பழைய கதை, புதிய கதை என எல்லாக் குப்பைகளும் கிளறப்படும். அதன் நாற்றத்தை உங்கள் கட்சியினராலேயே தாங்க முடியாது.
Recommended Video

அரசியல்வியாதி பழனிசாமி
நடவடிக்கை எடுத்தவர்களிடம் மோதுவதற்குத் திராணியில்லாத - முதுகெலும்பில்லாத - மண்புழுவுக்கு இருக்கும் தன்மைகூட இல்லாத அரசியல்வியாதியான பழனிசாமிக்கு தி.மு.க.வையும், அதன் தலைவரும் எந்நாளும் மக்கள் நலன் காத்திட உழைத்திடும் முதலமைச்சருமான, இந்தியாவின் 'நம்பர் ஒன்' முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை. துணிவிருந்தால் - நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications