Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிப்பன் மாளிகையில் திமுக ஆட்சி! அண்ணா எடுத்த வாக்கெடுப்பு; சம்பத் செய்த சதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரம்பரிய பெருமைவாய்ந்த சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கை ஆளும் பொறுப்பை முதன்முறையாக 1959இல் முதன்முறையாகக் கையகப்படுத்தியது திமுக.

ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்த 1954 ஆம் ஆண்டு முதல் 1963 வரை முதல் அமைச்சராக காமராஜ் மொத்தம் 9 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார். பின்னர் காமராஜரே மனம் விரும்பி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பக்தவத்சலத்தை தனக்குப் பதிலாகப் பதவி நாற்காலியில் அமர்த்திவிட்டு, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பதற்காக டெல்லி சென்றார்.

dmk-rule-in-ribbon-building-anna-takes-vote-sampaths-conspiracy

எந்தளவுக்கு எளிமையாக காமராஜ் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் செயல்பட்டார் என அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் மறைந்த பத்திரிகையாளர் சாவி எழுதிய 'சிவகாமியின் செல்வன்' புத்தகத்தைப் படித்து அறிந்துகொள்ளலாம். நாம் இங்கே விவாதிப்பது தேர்தல் அரசியல் வரலாறு என்பதால் அந்தக் கதையை இங்கே தேவை இல்லாதது என்பதால் தவிர்த்துவிடுகிறோம்.

ராஜாஜி ஆட்சிக் காலத்தில் 'பாதி நேரப் பள்ளிக்கூடம்' திட்டம், 'நெசவாளர் வறுமையில் வாடுவதைத் தடுக்க வேண்டி போராட்டம்' 'டால்மியா' புரத்திற்குத் தமிழில் கல்லக்குடி எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டி வலியுறுத்திய போராட்டம் என திமுக ஆளும் கட்சியைத் திக்குமுக்காட வைத்தது.

காமராஜ் ஆட்சியில் கலவரம்

அதேபோல் காமராஜ் ஆட்சிக்கு வந்த பின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 'முதுகுளத்தூர்' கலவரம் வெடித்தது. அதில், இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இது காமராஜரின் காங்கிரஸ் ஆட்சிக்குக் களங்கமாக அமைந்தது. இவரது ஆட்சிக் காலமான 1956இல் தான் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. அப்போது 'மெட்ராஸ்' என இருந்த மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு சங்கரலிங்கம் தன் உயிரையேத் தியாகம் செய்தார். மாநில பெயர் மாற்றப் பிரச்சனையைக் காமராஜர் பெரியதாகக் கவனம் செலுத்தவில்லை.

இதற்கே உயிர்த்தியாகம் செய்த சங்கரலிங்கம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரது உயிரிழப்பை திமுக தன் அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. முதுகுளத்தூர் கலவர நடந்த இரண்டே வாரங்களில் அச்சூழலைக் கண்டறிய நேரடியாக ஆய்வு நடத்தச் சென்றார் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதி. இன்னொரு பக்கம் 1957இல் பெரியார் ஹோட்டல்களில் 'பிராமணாள்' என்ற பெயர்ப் பலகையை அழிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். திருவல்லிக்கேணியில் 'முரளி பிராமணாள்' ஹோட்டலை பெயர் பலபகை அழிப்புக்கு அழைப்பு விடுத்தார். மாநிலத்தின் அரசியல் சூழல் திமுக மற்றும் திக கைக்கு மாறியது.

இந்நிலையில்தான் 1957இல் சட்டமன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுக வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். சட்டமன்றத்தில் 15 தொகுதிகளையும் நாடாளுமன்றத்தில் 2 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக. வேறு வழியில்லாமல் தேர்தல் ஆணையம் முறையாகக் கட்சி அதிகாரத்தை திமுகவுக்கு வழங்கி, உதயசூரியன் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஆக்கியது.
திமுக வெற்றிக்குப் பின்னால் திரைத்துறையினரின் பங்களிப்பும் கலந்திருந்தது. 1953இல் எம்.ஜி.ஆரை கட்சிக்குள் கொண்டுவந்த மு.கருணாநிதி, அவருக்கு 1954 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை அளித்திருந்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மன்றங்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டது திமுகவின் தேர்தல் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்தது.

அண்ணா எழுப்பிய கேள்வி

இந்தத் தேர்தல் வெற்றி பற்றி அண்ணாதுரை கூரிய விளக்கம் அன்றைக்கு மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது. "வெறும் 10 லட்சம் வாக்குகளைப் பெற்ற கம்யூனிஸ்ட்டுகள் கேரளாவில் ஆட்சியை அமைத்துவிட்டனர். ஆனால், 15 லட்சம் வாக்குகளைப் பெற்றும் சட்டமன்றத்தில் 15 இடங்களையே பெற்றுள்ளோம்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அண்ணாதுரை.

இதே காலகட்டத்தில் மற்றொரு பக்கம் ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட சித்தூரை, தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டி ம.பொ.சிவஞானம் போராட்டம் நடத்தினார். தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் இந்த அரசியல் மாற்றத்தை உணராமல் முதல்வர் காமராஜ் இருந்தார் என்பதைவிடப் பிரதமர் நேரும் இந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லை என்பதை அவர் வெளியிட்ட மூன்று அறிக்கைகள் எடுத்துக்காட்டின.

நேருவின் முதல் அறிக்கை போராட்டக் களத்தில் முன்னணியில் நின்ற ஈ.வெ.ராமசாமியை 'பைத்தியக்காரன்' என்றது. அடுத்த அறிக்கை இந்தி எதிர்ப்பை 'சிறுப்பிள்ளை தனமானது' என்றது. ம.பொ.சி.யின் நிலைப்பாட்டை 'முட்டாள் தனம்' என்றது.

இதைக் கண்டித்து திமுக 1958 ஜனவரி 3 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்தத் திமுக அனுமதிக் கோரியது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜூன் 6 ஆம் தேதி சென்னை விமானநிலையத்தில் கால்வைத்த நேருவை ஆயிரக்கணக்கான கறுப்புக் கொடிகள் வரவேற்றன. 150 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அன்பழகன், மதியழகன், ஏ.வி.பி ஆசைத்தம்பி ஆகியோருடன் எம்.ஜி.ஆர்., எஸ்.ஏஸ்.ஆர்., கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி போன்ற திரை நட்சத்திரங்களும் அதில் அடங்குவர். இந்தப் போராட்டச் சூழலால் திமுக மக்கள் மத்தியில் தன் அரசியல் செல்வாக்கை வளர்ந்துகொண்டது. காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது வலிமையை இழந்துபடி இருந்தது.

மேயர் ஆன ஏ.பி.அரசு

இந்நிலையில் 1959இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது திமுக. சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளராக மு.கருணாநிதி நியமிக்கப்பட்டார். இத்தேர்தலில் காங்கிரஸ் 37 வார்டுகளில் வென்றது. திமுக 45 இடங்களில் வென்றது. சோஷலிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் லீக் உதவியுடன் மாமன்றத்தை ஆள திமுக முயன்றது. ஒருவேளை திமுக மாமன்றத்தை ஆளத் தொடங்கினால் மு.கருணாநிதியின் கை உயர்ந்துவிடும் எனக் கருதிய ஈ.வெ.கி.சம்பத், பொறுப்பேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

அண்ணாதுரையின் மனமும் சம்பத்திற்கு ஆதரவாகச் சாய்ந்தது. 50% க்கும் மேலான உறுப்பினர்கள் இருந்தால் மாமன்றத்தை ஆளும் பொறுப்பை ஏற்பது சரியாக இருக்கும் என்று கருதினார். குழப்பத்திற்குத் தீர்வு காண 1959 ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தினார் அண்ணாதுரை. கூட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றப் பச்சை விளக்குக் காட்டியது. பாரம்பரிய பெருமை வாய்ந்த சென்னை மாமன்றத்தை ஆளும் அதிகாரத்தை திமுக ஏற்றது. சென்னை மாநகர மேயராக ஏ.பி.அரசு பதவியேற்றார்.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+