5 ஆண்டுகளில் 5 லட்சம் MSME நிறுவனங்கள்! பெண்களுக்குக் கடன் உதவி! கவனம் பெறும் திமுகவின் வாக்குறுதி
சென்னை: தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மாநில வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி வருகின்றன. 2021-ஆம் ஆண்டு மே மாதம் 2,146 ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 12,663 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பெண்களைத் தலைமையாகக் கொண்டு இயங்குகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் சுமார் 2.92 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மத்திய அரசின் உத்யம் இணையதளம் தெரிவிக்கிறது. இதன் மூலம் எம்.எஸ்.எம்.இ. பதிவுகளில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 4,765 பயனாளிகளுக்கு சுமார் 400 கோடி ரூபாயும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4,955 நபர்களுக்கு 475 கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் 17 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 மாவட்டங்களில் 16 தொழிற்பேட்டைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிக அளவிலான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படுவதற்கு இதுபோன்ற திட்டங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது.
அடுத்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் புதிய எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் மற்றும் ஒரு லட்சம் பெண்கள் உட்பட 2 லட்சம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டம், தொழில் தொகுப்புகளை நவீனப்படுத்தும் திட்டம், பொது வசதி மையங்களை அமைக்கும் திட்டம், சிறு நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஏதுவாக 10 மாவட்டங்களில் ஏஐ கிளினிக்குகள் தொடங்குவது போன்ற திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொழில் தொடங்க விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனத் தயாரிப்புகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் அமைக்கப்படு, காண்டன் ஃபேர் போன்ற பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கச் செய்தல் போன்ற வாக்குறுதிகளும் இதில் அடங்கும்.

புவிசார் குறியீடு பெற 'தமிழ்நாடு ஜிஐ மிஷன்', மண்டல வாரியான தனித்துவமான பொருட்களுக்குத் தனி வர்த்தகக் குறியீடுகள் உருவாக்கும் திட்டங்களும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற குறியீடுகளுக்கு உலக அளவில் அங்கீகாரத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 3 லட்சம் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும், குறிப்பிட்ட விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டல் சங்கிலி அமைக்கப்படும், ஏஐ மூலம் இயங்கும் திறன் பதிவேடு உருவாக்கப்படும் போன்ற திமுகவின் வாக்குறுதிகள் தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், இளைஞர்களிடையே கவனம் பெறுவதாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications