விபூதி பட்டை, ருத்ராட்ச கொட்டையுமாய் இருந்த எம்ஜிஆரை புரட்சி நடிகராக்கியது கருணாநிதி: திமுக பதிலடி
ஜெயக்குமாருக்கு திமுக அமைப்பு செயலாளர் பாரதி பதிலடி தந்துள்ளார்
சென்னை: எம்ஜி இராமச்சந்தரை "எம்.ஜி.இராமச்சந்திரன்" ஆக்கியதும், அதன்பிறகு "புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்." என்ற பட்டப் பெயர் வரக் காரணமே, கலைஞர்தான் என்பது வரலாற்று உண்மை.. எம்ஜிஆர் - முக ஸ்டாலின் இடையேயான உறவு குறித்து ஜெயக்குமார் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலடி தந்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைய தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், திமுக பற்றி விமர்சித்திருந்தார்.
"தன்னை திமுகவின் தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கிய கட்சியின் பொருளாளரான எம்ஜிஆரையே, கணக்கு கேட்டார் என்பதற்காக கட்சியை விட்டே நீக்கி, ஏறிய ஏணியை எட்டி உதைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுகள் பொய்யையும், புனைச் சுருட்டையும் மூலதனமாக்கி அரசியல் நடத்துவது விந்தையானதல்ல என்றும், எம்ஜிஆரை பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதாகவும் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமார்
இந்நிலையில், ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கும், விமர்சனத்துக்கும், புகார்களுக்கும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலடி தந்துள்ளார்.. இது தொடர்பாக பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடும் - வரலாற்றுச் சான்றுகளோடும் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இருந்த கலையுலக நட்பு குறித்து வெளியிட்ட அறிக்கையை அனைவரும் குறிப்பாக, அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்டத் தொண்டர்களும் பாராட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய்யினை புனைந்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

முக ஸ்டாலின்
எம்.ஜி.ஆருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இருந்த உறவு எத்தகையது என்பது ஜெயக்குமார் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், எம்.ஜி.ஆர். தி.மு.கழகத்தில் இருந்தபோதோ அல்லது எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கியபோதோ, ஜெயக்குமார் எங்கே இருந்தார் என்பது அ.தி.மு.க.வின் தொடக்கக் கால தொண்டர்களுக்குத் தெரியும். மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் தனது இளமைப் பருவத்தில், 'இளைஞர் தி.மு.க.' தொடங்கிய காலந்தொட்டு, அறிஞர் அண்ணா - எம்.ஜி.ஆர். போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

மாநாடு
குறிப்பாக, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில், சென்னையிலிருந்து, "அண்ணா சுடர்'' ஏந்தி, ஓட்டமாகவே காஞ்சிபுரம் மாநாட்டு மேடையில் முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், அன்றைய தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் ஒப்படைத்து, அவர்களின் பாராட்டைப் பெற்றவர் என்பதை அறியாத 'தற்குறிதான்' ஜெயக்குமார்.

எம்ஜிஆர்
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் "முத்தமிழறிஞர் கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வாயிலாக தனக்கென்று தனி இடம் பெற்றவர் எம்.ஜி.ஆர்." என்று குறிப்பிட்டுள்ளதில் என்ன குற்றம் கண்டுபிடித்தார் ஜெயக்குமார். இந்த இரண்டு படங்கள் மூலமே எம்.ஜி.ஆர். கலையுலகில் பிரபலமானார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், வரலாறு தெரிந்து கொள்ளாத ஜெயக்குமார், இந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே என் தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகில் எம்.ஜி.ஆர். கோலோச்சினார் என்ற 'பச்சைப் பொய்யை' சொல்கிறார்.

மர்மயோகி
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வெளிவந்த ஆண்டு 1950. ஆனால், ஜெயக்குமார் குறிப்பிட்ட படங்களான மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய படங்கள் 1951-லும், என் தங்கை படம் 1952-லும் வெளியிடப்பட்டது என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல், தான் ஒரு "தற்குறி" என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

உத்திராட்சை கொட்டை
கலைஞர் வசனத்தில் உருவான மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வெளி வருவதற்கு முன்பாக, எம்.ஜி.ஆர். நெற்றியில் விபூதி பட்டையும் - கழுத்தில் உத்திராட்சை கொட்டையும் - உடலில் கதர்சட்டையும் அணிந்திருந்த எம்.ஜி.இராமச்சந்தரை "எம்.ஜி.இராமச்சந்திரன்" ஆக்கி, பிறகு, 'புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.' என்ற பட்டப் பெயர் வரக் காரணமே "கலைஞர்" என்பது வரலாற்று உண்மை. கலைஞருக்கும் - எம்.ஜி.ஆருக்கும் இருந்த கலையுலக உறவு, 'தண்ணீரும் பாலும் கலந்த உறவு' போல பிரித்து பார்க்க முடியாதது என்பதை கலையுலகம் நன்கு அறியும்.

மதுரவாயல்
தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டது என்ற காரணத்தால், தமிழக புதிய சட்டமன்ற கட்டிடத்தை 'மருத்துவமனை'யாக மாற்றியதையும் - தி.மு.க. ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக 'மதுரவாயல், துறைமுகம் பறக்கும் சாலை' திட்டத்தை கிடப்பில் போட்டதும் - ஆசியாவிலேயே பெரிய நூலகமான "அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை'' மூடிட முயற்சித்ததும் போன்ற கீழ்த்தரமான அ.தி.மு.க. ஆட்சி போன்ற காழ்ப்பை கொண்டவர் அல்ல கலைஞர். 1989ல் தான் ஆட்சிக்கு வந்ததும், பெருந்தன்மையோடு, தனது நாற்பதாண்டு கால நண்பரின் பெயரால் பல்கலைக் கழகம் கண்ட பெருமை கொண்டவர் கலைஞர்.

நினைவிடம்
எம்.ஜி.ஆர். மறைந்தபோது, "ஜா - ஜெ" என்று குடுமிபுடி சண்டை போட்டுக் கொண்டு, எம்.ஜி.ஆர். அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கண்டு கொள்ளாமல் இரு அணிகளும், தங்களை உருவாக்கிய தலைவரைப் பற்றி கவலை கொள்ளாமல் இருந்தது, அந்த கட்சியின் உண்மையான தொண்டர்களுக்குத் தெரியும். கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தவர். எம்.ஜி.ஆருக்காக முதலைக் கண்ணீர் விட்டு அறிக்கை விடும் யோக்கியதை ஜெயக்குமார் போன்றவர்களுக்கு அறவே கிடையாது.

கலைஞர்
காரணம், கலைஞரால், சென்னை, அடையாறில் இயங்கி வந்த திரைப்படக் கல்லூரிக்கு "எம்.ஜி.ஆர்." பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர். ஆனால், அதே கல்லூரிக்கு எம்.ஜி.ஆர். பெயரை நீக்கிவிட்டு, "ஜெயலலிதா" பெயரை சூட்டிக் கொண்டவர்கள் யார்? இன்று அறிக்கை விடும் இந்த ஜெயக்குமாரைப் போன்றவர்கள், அப்பொழுது எங்கே இருந்தார்கள்? ஜெயலலிதா மறைந்தபோது, சசிகலா காலில் சாஷ்டங்கமாக விழுந்து - கூவத்தூரில் கும்மாளம் அடித்து - சசிகலாவை சின்னம்மா என்று புகழ்ந்து பேசிவிட்டு, தற்போது அதே சசிகலா கழுத்தில் கால் வைத்து மிதிக்க நினைப்பவர்களுக்கு, மு.க.ஸ்டாலினை பற்றி பேசவோ, அவரைப் பற்றி அறிக்கை விடவோ எந்த யோக்கியதையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications