திமுக ஜெயிச்சதுக்கு உதயநிதிதான் காரணமா? இதெல்லாம் எவ்வளவு அசிங்கம்? புகைச்சலில் சீனியர்கள்
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியை இளைஞரணி செயலராக்கும் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஆனால் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிக்கே உதயநிதியின் பிரசாரம்தான் காரணம் என்பதைப் போல் ஒரு பொய்யான வரலாறை பதிவு செய்வதை ஜீரணிக்க முடியவில்லை என்கின்றனர் திமுக சீனியர்கள்.
திமுக தொடங்கப்பட்ட போது ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக கருணாநிதி இல்லை. பின்னாளில்தான் திமுகவின் மூத்த தலைவர்கள் பலரோடு, பத்தோடு பதினொன்றாக இருந்தவர் கருணாநிதி.
அண்ணா மறைவின் போது கூட திமுகவின் அடுத்த தலைவர் கருணாநிதிதான் என்கிற நிலைமை இல்லை. நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் இருந்தனர். அந்த போட்டியில் கருணாநிதியும் இருந்தார் என்பதுதான் வரலாறு.
திமுக தலைவரான கருணாநிதி, தம்மைவிட கட்சியில் இனி யாரும் தலையெடுக்கக் கூடாது என்பதற்காகவே எம்.ஜி.ஆரை வெளியேற்றினார். மூத்த தலைவர்களை தமக்கு கீழானவர்களாக தக்க வைத்துக் கொண்டார். அதுவரை வெளியான திராவிட இயக்க ஏடுகள் அனைத்தையும் காணாமல் செய்து தமது முரசொலி பத்திரிகையையே திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக்கினார்.

வைகோ வெளியேற்றம்
அப்போது மகன் ஸ்டாலினை மெல்ல மெல்ல கட்சிக்குள் கொண்டு வந்தார். அரும்பாடுபட்டு கட்சியை கைப்பற்றிய கருணாநிதி, மகனை அரியாசனத்தில் அமர வைத்து தம் முயற்சிகளை விழலுக்கு இறைத்த நீராக்க விரும்பவில்லை. அதனால் திமுகவில் படிப்படியாக ஒவ்வொரு நிலையாக ஸ்டாலினை முன்னிறுத்தி வந்தார். ஆனாலும் 1980களின் இறுதியிலேயே கருணாநிதி, மகனையே அடுத்த தலைவராக்குகிறார் என்கிற சலசலப்புகளை எதிர்கொண்டது திமுக. இதன் உச்சமாகத்தான் 1993-ல் வைகோ தூக்கியடிக்கப்பட்டு மதிமுக உதயமானது. வைகோ வெளியேறிய நிகழ்வால் திமுகவினர் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின்தான் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டனர். அது கருணாநிதியின் ராஜதந்திர வெற்றியும் கூட.

இயல்பான தலைவர் ஸ்டாலின்
அதிகாரத்திலும் கூட எம்.எல்.ஏ., மேயர், அமைச்சர், துணை முதல்வர் என ஒவ்வொரு படிநிலையாகவே ஸ்டாலினை வளர்த்தெடுத்தார் கருணாநிதி. ஸ்டாலினுக்கு இடையூறாக இருப்பார் என்பதாலேயே அழகிரியை தாம் உயிருடன் இருக்கும் போதே ஓரம்கட்டினார் கருணாநிதி. இதனால்தான் கருணாநிதி மறைந்த உடனேயே எந்த ஒரு போட்டியும் இல்லாமல் திமுக தலைவரானார் ஸ்டாலின்.

உதயநிதிக்கு என்ன முக்கியத்துவம்
இத்தகைய நெடிய வரலாற்றைக் கொண்ட ஸ்டாலின் தன் மகன் விவகாரத்தில் இவ்வளவு அவசரப்படுவதுதான் திமுக சீனியர்களை கோபப்பட வைத்திருக்கிறது. ஆர்வக்கோளாறில் செய்யப் போகும் நடவடிக்கைகளால் அறுவடை என்னவாகும் என்பதை உணராமல் செய்கிறார் ஸ்டாலின் என்கின்றனர் அவர்கள். லோக்சபா தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கிகள், பேச்சாளர்கள் ஓரம்கட்டப்பட்டு ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உதயநிதி ஒன்றும் திராவிடர் இயக்க வரலாற்றை மணிக்கணக்கில் பேசுகிற வைகோவும் அல்ல. எதிரே உள்ளவர்களை அடுக்குமொழி சொற்களால் ஈர்க்கிற நாஞ்சில் சம்பத்தும் அல்ல.. பேச்சு மொழியால் நகைச்சுவை உணர்வால் கட்டிப் போடுகிற லியோனி வகையறாக்களும் அல்ல..

வரலாற்றுப் பொய்
கல்லாப்பெட்டியில் கொட்டிக்கிடக்கும் காசை செலவு செய்ய ஒரு நடிகராகி, ஒரு தயாரிப்பாளராகி அதை வைத்து திமுக எனும் கட்சிக்குள்ளும் நோகாமல் ஊருவி நொங்கு திங்க விரும்புகிற ‘இளவரசர்தான்' உதயநிதி. அவரை முன்னிறுத்தியதால் எத்தனை தொகுதிகளில் எத்தனை வாக்குகள் எரிச்சலில் காணாமல் போனதோ? தெரியவில்லை. அப்படியான ஒரு உதயநிதி பிரசாரத்தால்தான் திமுக லோக்சபா தேர்தலில் திமுக ஜெயித்தது என்கிற அப்பட்டமான ஒரு பொய்யை சொல்லி ஒரு தீர்மானம் போடுகிறது திமுக மாவட்டங்கள். களப்பணியாற்றிய கழக உடன்பிறப்புகளைவிட கசங்காத சட்டையோடு வந்து உளறிவிட்டுப் போன உதயநிதியால்தான் இத்தனை பெரிய அறுவடையா?

இதை செய்யலாம்
திராவிடப் பேரியக்கத்தின் இந்துத்துவா எதிர்ப்பு அலையும் திமுக மீதான மாபெரும் நம்பகத்தன்மையும்தானே வாக்காளர்களை கட்சிக்கு வாக்காக கொண்டு வந்து சேர்த்தது. அந்த ஆகப் பெரும் வரலாற்றை கொச்சைப்படுத்திவிட்டு உதயநிதியே எல்லாவற்றுக்கு காரணம் என அற்ப கட்சிப் பதவிக்காக வரலாற்றை திரிக்கிறது திமுக. இதுதான் திமுக மூத்த நிர்வாகிகள் பலரது கொந்தளிப்புமாக இருக்கிறது. சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொண்டு அதில் உதயநிதியும் பிரசாரம் செய்து திமுக ஆட்சி அமைத்த பின்னர் கூட இப்படியான ஒரு பதவியை கொடுத்திருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு இப்படியெல்லாம் பொய்யான வரலாற்றை எழுதுவது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? என்கின்றனர் அந்த மூத்த நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications