Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பவே சந்தேகப்பட்டோம்.. வன்முறையால் உள்ளாட்சி தேர்தலில் வென்ற திமுக.. ஓபிஎஸ்-எடப்பாடி கூட்டறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய தேர்தல் வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணாவின் இதயக் கனி புரட்சித் தலைவர் கண்டெடுத்த ஈரிலைக் கழகமாம் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஈரிலை வெற்றிச் சின்னத்தை கை வைத்து மறைத்துவிடலாம் என்று எண்ணி இது போன்ற ஜனநாயக விரோதப் போக்கை தி.மு.க. நடத்தி முடித்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்பு வெளியான உடனே, கழகம் இது ஜனநாயக விரோதப் போக்கான அறிவிப்பாக இருக்கிறது. கழகம் ஆட்சிக் கட்டிலிலே இருந்தபோது இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது. ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க. அரசு இரண்டு கட்டங்களாக நடத்த முயல்கிறது. இதில் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தால் நியாயமான முறையிலே நடைபெறுவதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்லி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்திலே W.P.20671/2021 (Election) - All India Anna Dravida Munnetra Kazhagami - Vs - Tamil Nadu State Election & 2 Others என்ற வழக்கை 1.10.2021 அன்று தொடுத்தது.

அதிமுக கோரிக்கை

அதிமுக கோரிக்கை

அந்த வழக்கில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு வட்டத்திற்கும், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தனித்தனியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடிகள் மூன்றடுக்கு பாதுகாப்போடு பாதுகாக்கப்பட வேண்டும். வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படக்கூடிய அறையை கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தோம்.

திமுக வன்முறை களியாட்டங்கள்

திமுக வன்முறை களியாட்டங்கள்

தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன அனைத்துக் கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தலை நாங்கள் நடத்துவோம் என்று தமிழக தேர்தல் ஆணையமும் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. அரசு, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்தபோதிலும் அதை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வன்முறைக் களியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

 நாடும் தாங்காது, ஏடும் தாங்காது

நாடும் தாங்காது, ஏடும் தாங்காது

வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் தி.மு.க. அரகம், தமிழக தேர்தல் ஆணையமும் நடத்தியிருக்கக்கூடிய தேர்தல் விதிமீறல்களையும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது. குறிப்பாக சிலவற்றை, பொது நலன் விரும்பும், தமிழகத்தில் அமைதியை நாடும். என்றென்றும் நல்லாட்சியை விரும்பும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுவும், நான்கு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தேர்தல்
ஆணையத்தின் கவனத்திற்கு 25.9.2021 அன்று கொண்டு சென்றோம். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

 வாய்மொழி உத்தரவு

வாய்மொழி உத்தரவு

கடந்த 4.10.2021 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும், ஊாவட்டத் தேர்தல் அதிகாரியுமான திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள், அப்பட்டமான ஜனநாயகத்தின் சூரல்வளையை நெறிக்கக்கூடிய விதத்திலே எந்தவிதமான கற்றறிக்கையும் அனுப்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்தல் அலுவலர்களையும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து தி.மு.க-வின் வேட்பாளர்களின் பட்டியலைப் பெற்று, வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற்றதாக நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார். அந்தத் தகவலை அறிந்த கழகம் தேர்தல் ஆணையத்தின் கவளத்திற்குக் கொண்டு வந்து புகார் மனுவாகவும் கொடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த இடத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லை என்று சொன்னால் குறைந்தபட்சமாக தேர்தல் பணியில் இருந்தாவது அவர் விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்தோம். அந்தப் புகார் மனு மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

நாமக்கல் நிலவரம்

நாமக்கல் நிலவரம்

நாமக்கல் மாவட்டம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், வார்டு எண். 6-ல் நடைபெற்ற தற்செயல் தேர்தலில் தமிழக அரசின் சின்னம் பதித்த தி.மு.க. தலைவர்களின் படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர்களிடத்திலே கொடுத்து வாக்குறுதிகளை அளித்து நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து அதன்மூலம் மாதம் 5,000/ ரூபாயும், விபத்துக் காப்பீடாக 1 லட்சமும் கிடைக்கும் என்று மக்களை திசை திருப்பி வாக்கு சேகரிப்பு நடைபெறுகிறது என்று புகார் மனு கொடுத்திருந்தோம். அந்தப் புகார் மனு மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மதம் ஏறிய யானைகள் போல செயல்பட்டனர்

மதம் ஏறிய யானைகள் போல செயல்பட்டனர்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 10.10.2021 அன்று திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை பாதுகாக்கப்பட்ட அறையில் திருப்பத்தூரைச் சேர்ந்த தி.முக. சட்டமன்ற உறுப்பினர்கள் அத்துமீறி உள் நுழைந்து வாக்குப் பெட்டிகளை சேதப்படுத்தி மூடி முத்திரையிடப்பட்ட பூட்டுகளை உடைத்து மதம் ஏறிய யானைகளாக செயல்பட்ட காணொளிக் காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. அச்சம்பவத்தின் அடிப்படையில் கழகம் அளித்த புகாரின் பேரில் தி.மு.க-வினரை நம்பி ஏமாந்த தேர்தல் அலுவலர்களும், காவலர்களும் சம்பவம் பூதாகரமாக ஆகிவிட்டதினால் வேறு வழியில்லாமல், எப்படியும் மூடி மறைக்க முடியாது என்பதனால் தேர்தல் ஆணையத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை வழக்குகள்

காவல்துறை வழக்குகள்

கழகம் தொடர்ந்து வெற்றிபெறக் கூடிய உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள கழக உடன்பிறப்புகளை காவல்துறையின் வாயிலாக பொய்யான வழக்குகளை பதிவு செய்து அவர்களை தேர்தல் பணியாற்றவிடாமல் முடக்க வேண்டும் என்பதற்காக 9 மாவட்டங்களில் பல்வேறு கழக உடன்பிறப்புகளின் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 விதியின் கீழ் பல இன்னல்களை தி.மு.க. அரசின் ஏவல் துறையான காவல்துறை முன்னெடுத்தது. அதை நிரூபிக்கின்ற விதமாக கழகம் உயர்நீதிமன்றத்தை நாடி பல கழக உடன்பிறப்புகளுக்கு முன் பிணை பெற்ற பிறகும் காவல்துறை தன்னுடைய கோரப் பற்களால் சட்டத்தின் குரல்வளையை நெறித்து ரத்தம் உறிஞ்சும் மாமிச உண்ணிகளாக மாறியிருப்பது உள்ளபடியே மிகுந்த மன வேதனையை எங்களுக்கு மட்டுமல்லாமல் இதை அறிந்த தமிழக பொதுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் கைகோர்ப்பு

தேர்தல் ஆணையம் கைகோர்ப்பு

நேற்று நடைபெற்ற சட்ட விதிமீறல்களையும், ஜனநாயக படுகொலையையும் முன்கூட்டியே அறிந்த கழகம் கடந்த 7.10.2021 அன்று தேர்தல் ஆணையத்திடம், விரிவாகவும், தெளிவாகவும், வாக்கு எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக்கூடாது. வெற்றி பெற்றவர்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஆளும் தி.மு.க-வின் நிர்வாகிகளை வாக்கும் எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என்பனவற்றை வலியுறுத்தி மனு கொடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் என்ன சொல்வது, நாங்கள் என்ன கேட்பது என்பதை போல நம்முடைய கோரிக்கைகளுக்கு நேரெதிராக ஆளும் தி.மு.க. அரகம், தேர்தல் ஆணையமும் ஒன்றாக கரம் கோர்த்து வாக்காளர்களை துச்சமென மதித்து செயல்பட்டிருக்கிறது.

வாக்கு எண்ணும் நாளில் கலவரம்

வாக்கு எண்ணும் நாளில் கலவரம்

வாக்குப் பதிவு நாளன்று பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கழகத்தின் சார்பிலே தேர்தல் ஆணையத்தில் 9.10.2021 அன்று மனு கொடுத்தோம். அதன் மீதும் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கத் தவறியிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட்ட அறையில் கண்காணிப்புக் கேமராக்கள் பல இடங்களிலே பழுதடைந்து இருக்கிறது. இது மிகப் பெரிய ஐயத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் நாளன்று காலை முதலே பல்வேறு அராஜக நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் ஆங்காங்கே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆளும் தி.மு.க. அரசிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகுதான் தொடங்கி இருக்கிறது. அதற்கான உத்தரவைப் பெற யாருக்காக காத்திருந்தார்கள் என்பது தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் தெரியும்.

பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை

பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முகவர்கள் பல இடங்களிலே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் 4-ஆவது தூணான பத்திரிகையாளர்களே பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஊடகத் துறையினராலும், பத்திரிகைத் துறையினராலும் நடந்து முடிந்தது. மக்களையும், வாக்காளர்களையும் ஊடகத் துறையையும், பத்திரிகைத் துறையையும் துச்சமென மதிக்கும் தி.மு.க. அரசு இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாமல், மக்கள் செல்வாக்கை இழந்தபோதிலும் 4 மாதங்களிலே சாயம் வெளுத்த நரியாகவும், காலுடைந்த பரியாகவும் இருக்கக்கூடிய தி.மு.க. அரசு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவும், மக்களிடத்திலே செல்வாக்கு இருக்கிறது என்பதை தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவும் இந்தத் தேர்தலில் பல வன்முறைகளை கட்டவிழ்த்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே முனைப்போடு சட்டத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்தத் தேர்தல்களில் வெற்றிகளை பெற்றிருக்கிறது.

நீதிமன்றம் செல்வோம்

நீதிமன்றம் செல்வோம்

பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மிகவும் தாமதமாக வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தாமதப்படுத்தியிருக்கிறார்கள். பல இடங்களில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அந்த வெற்றியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்புக் காட்டவில்லை. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். இடங்களிலே பல வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள். இது போன்ற ஜனநாயகப் படுகொலை தி.மு.க. நடத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்த கழகம், கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. R.M. பாபு முருகவேல் அவர்கள் மூலம் 7 புகார் மனுக்களை தேர்தல் ஆணையத்திலே வழங்கி இருக்கிறோம். அந்தப் புகார் மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டும் பெற்றிருக்கின்றோம். ஏற்கெனவே கழகம் தாக்கல் செய்த வழக்கில் மீண்டும் இந்த சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து நியாயம் பெற்று இந்தத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என்பதைக் கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவோம்.

அதிமுக தொண்டர்களுக்கு பாராட்டு

அதிமுக தொண்டர்களுக்கு பாராட்டு

எந்த நிலை வந்தாலும், இந்த நிலை மாறாது என்று கழகத்திற்காக உயிரே போனாலும் தேர்தல் என்று வந்தால் ஈரிலைதான் எங்களின் உயிர் மூச்சு என்று தேர்தல் களமாடி தி.மு.க. அராஜகச் செயலில் ஈடுபடும் என்று தெரிந்தும், வன்முறைச் செயல்களில் ஈடுபடும் என்று தெரிந்தும், தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றும் என்று தெரிந்தும்; கொண்ட கொள்கைகளி செயல் மறவர்களாகப் பணியாற்றி கண் துஞ்சாமல் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக களமாடிய கழக உடன்பிறப்புகளுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். அதோடு, தி.மு.க-விற்கு எங்களுடைய ஓட்டு எந்தக் காலத்திலும் இல்லை. அவர்கள் எங்களுடைய வாக்குகளை அவர்களாகவே பதிவு செய்து அதிகாரிகளைக் கையிலெடுத்து தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கி வெற்றி பெற்றாலும் எங்களுடைய உளப்பூர்வமான அண்ணாவின் இதயக்கனி பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்டெடுத்த ஈரிலைக் கழகமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் என்று உறுதிபூண்டு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+