அம்மா உணவகம் சூறையாடல்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் கண்டனம்
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட திமுகவினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சென்னையில் அம்மா உணவத்திற்குள் புகுந்த சிலர் அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து போட்டு அங்கிருந்தவர்களை மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தை சூறையாடியவர்கள் திமுகவினர் தான் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அம்மா உணவகம் சூறையாடும் வீடியோவில் ஒருவர் திமுக துண்டு அணிந்து இருந்த நிலையில் இணையத்தில் திமுக குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கின. இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்
சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் பகிரப்பட்டு #அம்மாஉணவகம்காப்போம் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மன்னிக்க மாட்டார்கள்
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
வேதனை
சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிப்பதாக பதிவிட்டுள்ளார்.
அராஜகம்
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட திமுகவினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது.
திருந்த மாட்டார்கள்
தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என்றும் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
ஸ்டாலின் நடவடிக்கை
இதனிடையே அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,இரண்டு பேரை கட்சியில் இருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மா.சுப்ரமணியன் பதிவிட்டுள்ளார்.