விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாக சபரீசன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும் என்று கூறியுள்ள சபரீசன், தேர்தலில் கட்டாயம் வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 21 நாட்கள் மட்டுமே இருக்கிறது. திமுக தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, எந்தவித சிக்கலும் இல்லாமல் நடத்தி முடித்தது. அதேபோல் கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் திமுக பக்கம் வந்துள்ளன.

இதன்பின் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அடுத்த நாளிலேயே திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில் மகளிருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு, பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஏதுவாக ஆயிரம் குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றது.
அதுமட்டுமல்லாமல் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்டவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு திமுகவின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சபரீசன், நீங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்தீங்களா.. நிச்சயம் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். திமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. ஏற்கனவே வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். திட்டங்களை கொடுத்துள்ளோம்.
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் கிடையாது. 100% திமுகவின் வெற்றி உறுதி.. 2 தொகுதிகளில் போட்டியிடும் போதே விஜய்யின் தன்னம்பிக்கை என்ன என்று தெரிகிறது. நாங்களும் நம்பிக்கையாக பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சபரீசன் திமுகவுக்காக பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே தேர்தல் அறிவிப்புக்கு முன் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து வேட்பாளர்கள் தேர்வு மற்றும் உட்கட்சி பூசல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்தார்.
இன்னொரு பக்கம் கருத்துக்கணிப்பு மற்றும் தொகுதி நிலவரம் குறித்து பென் நிறுவனத்திற்கான பணிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில் தேர்தலில் வாக்கு சேகரிப்பின் போது சபரீசன் திமுக வேட்பாளர்களுக்கு பணியாற்ற தொடங்கி இருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியில் நடந்த திமுகவின் கூட்டத்தில் சபரீசன் நேரடியாக பங்கேற்றார். அவருடன் முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரையும் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications