விஜய் மீது ஏன் வழக்கு பதியவில்லை?.. ஆவேசமாக கேட்ட திருமாவுக்கு திமுக சொன்ன பதில்!
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆதவ் அர்ஜுனா, வெளியிட்டு நீக்கிய ஒரு சமூக வலைதள பதிவுக்காகவே அவர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. விஜய் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா?
வலுத்தவருக்கு ஒரு சட்டம், இளைத்தவருக்கு ஒரு சட்டமா? காவல் துறை இது போன்ற ஓரவஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது? தமிழ்நாடு அரசுக்கு என்ன அச்சம், தயக்கம் என கேள்வி எழுப்பினார் திருமாவளவன்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, அரசு தரப்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே குற்றவாளி யார் என முடிவாகி, அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை விஜய் சம்பவ இடத்துக்கு வந்து பேசிவிட்டு சென்றவர் மட்டுமே.
இதற்கிடையே சம்பவ இடத்தில் தண்ணீர் உணவு போன்ற வசதிகள் இல்லை போன்ற புகார்களில் உள்ளூர் நிர்வாகிகள் மீது உள்ள சில தவறுகள் தெரியவந்ததால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தவெக சார்பில் அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்த இடத்திலிருந்து சில ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பதால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறான சமூக வலைதளப் பதிவு போட்டதால்தான் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications