2024ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல்? கொளுத்திப்போட்ட ஈபிஎஸ்! உள்நோக்கம் இதுதான்! பாய்ந்து வந்த திமுக
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சாத்தியமா? இல்லையா? என்பது பற்றி திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் இன்று விளக்கமளித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டம் தெரியவில்லை என சாடிய அவர் அவரது பேச்சின் உள்நோக்கம் இதுதான் என பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் பற்றி விவாதித்து வருகிறது. நாட்டில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்துவது தான் இதன் நோக்கமாகும். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விவாதித்து வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என கூறினார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

டிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில் தான் இன்று சென்னையில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 2024 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே? என அவரிடம் கேள்வி எழுப்பபப்பட்டது. அதற்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்தார்.

சட்டம் தெரியவில்லை
இதுபற்றி டிகேஎஸ் இளங்கோவன்‛‛எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டம் தெரியாது என நினைக்கிறேன். நாங்களே ஆட்சியை கலைத்தால் தான் தேர்தல் வரும். எஸ்ஆர் பொம்மை வழக்கில் சட்டசபை கலைக்கும் அதிகாரத்துக்கு செக் வைக்கப்பட்டது. இந்த வழக்கு 1993ல் வந்த பிறகு பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்தது தவிர வேறு எந்த சட்டசபையும் கலைக்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டம் தெரியவில்லை. அவர் மக்கள் மக்களை வைத்து கொள்ள இப்படி பேசுகிறார்.

ஓபிஎஸ்க்காக இப்படி பேசுகிறார்
இந்த பேச்சு என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு எதிரான பேச்சு தானே தவிர அரசியல் பேச்சு அல்ல. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என கூறினால் தான் அவருடன் இருப்பவர்கள் அங்கேயே இருப்பார்கள். ஓ பன்னீர் செல்வம் பக்கம் செல்லமாட்டார்கள் என்பதற்காக இப்படி பேசுகிறார். இதில் வேறு ஒன்றும் இல்லை.

சாத்தியப்படுத்தவே முடியாது
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கர்நாடகா தேர்தலை தள்ளிவைப்பார்களா?. ஒரே நாடு ஒரே தேர்தலை அரசின் கொள்கையாக சொல்லி வருகிறார்களே தவிர அதனை சாத்தியப்படுத்த முடியாது என்பது அரசுக்கும் தெரியும். உலகத்துக்கம் தெரியும். இந்த நாடு ஒரே நாடு எனினும் வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலில் மோடியை சந்தித்து கர்நாடகா தேர்தலையும் அடுத்தாண்டு வைத்து கொள்ளுங்கள் என கூற வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications