சந்திரசேகர ராவ்- ஸ்டாலின் சந்திப்பு... திமுகவுக்கு நிறம் மாறும் தன்மை இருக்கு.. தமிழிசை கடும் தாக்கு
சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து பேசிய தமிழிசை, திமுகவுக்கு நிறம் மாறும் தன்மை இருப்பதாக கடுமையாக விமர்சித்து உள்ளார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலினை இன்று அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது மூன்றாவது அணியில் இணையுமாறு சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்தாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஸ்டாலின் தெரிவித்து இருந்த நிலையில் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டாலின் சந்திரசேகர ராவ் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காங். அணியில் இணையுங்க.. ஸ்டாலின் அழைப்பால் கே.சி.ஆர். 'ஷாக்'
இந்நிலையில் சந்திரசேகரராவ் சந்திப்புக்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்? என்று தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என பகிரங்கமாக அறிவிக்க ஸ்டாலின் தயக்கம் காட்டியதாகவும் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். 3வது அணி பக்கம் ஸ்டாலின் செல்ல வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் அச்சப்படுவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
10 அணிகள் வந்தாலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை என்றும் தமிழிசை கூறினார். நிறம் மாறும் தன்மை திமுகவுக்கு இருக்கிறது என்றும் நிறத்தை மாற்றிப்பார்க்க சந்திரசேகர ராவ் வந்துள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.