நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- திமுகவின் வெற்றி தொடருமா? பாமக சாதிக்குமா?
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. கடந்த 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியை போல ஆளும் கட்சியான திமுக இந்த முறையும் சாதிக்குமா? வட தமிழகத்தில் பாமக தமது செல்வாக்கை காட்டுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாகும்.
செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2 கட்டங்களாக 2019-ம் ஆண்டு டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் நடைபெற்றன.
அப்போது அதிமுக அணியில் பாமக, பாஜக, தமாகா ஆகியவை இடம்பெற்றிருந்தன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 2020-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கட்சி அடிப்படையிலான பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் பெற்ற இடங்கள்:
514 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவுகள்:
- திமுக 244
- அதிமுக 214
- பா.ம.க. 16
- காங்கிரஸ் 15
- சி.பி.ஐ- 7
- பாஜக-7
- தேமுதிக- 3
- சி.பி.எம்- 2
- த.மா.கா- 3
- மற்றவை -22
5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவுகள்:
- திமுக 2095
- அதிமுக 1792
- பாமக 224
- காங்கிரஸ் 133
- தே.மு.தி.க 97
- பா.ஜ.க 83
- சி.பி.ஐ. 64
- சிபி.எம். 33
- த.மா.கா-23
- இதர கட்சிகள்- 793
இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் உள்ளிட்டவைகளால் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த முறை அதிமுக அணியில் இருந்து பாமக விலகி தனித்துப் போட்டியிட்டது. அதேபோல் சட்டசபை தேர்தலில் தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவும் தனித்து போட்டியிட்டது.
இத்தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடந்த தேர்தலைப் போல வெற்றி வாகை சூடுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு. அதேபோல் அதிமுகவின் இரட்டை தலைமையால் உள்ளாட்சி தேர்தலில் கடந்த முறை போலவே கணிசமான இடங்களைப் பெறுமா? என்பது கேள்விக்குறியாகவும் உள்ளது. ஏனெனில் தற்போது தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடதமிழகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த 7 மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கும் அதிகம். ஆனால் அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாமக தனித்துப் போட்டியிட்டது. இதனால் அதிமுக, பாமக பெறப் போகும் இடங்கள் எண்ணிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வட தமிழகத்தில் தேமுதிகவுக்கும் செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தேர்தலிலாவது கவுரவமான இடங்களை தேமுதிக பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications