அதிரடியில் இறங்கியது திமுக.. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
சென்னை: பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை மறுநாள் (ஜூலை 27 ஆம் தேதி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை கடந்த ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 7வது முழு பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் ஆந்திரா, பீகாருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து காட்டமாக விமர்சித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 27 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச் சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications