அவரும் உள்ளே வருகிறார்..2 பெரிய மாற்றம்! ரிசல்ட் வந்ததும் திமுக எடுக்கும் புது ரூட்! ஸ்டாலின் முடிவு
சென்னை: லோக்சபா தேர்தலில் முடிவுகள் வந்ததும் திமுகவில் 2 முக்கியமான மாற்றங்கள் இருக்கும் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஆரவாரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு: மாநிலத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.
முதலில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானது என்று கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதி நம்பரில் வாக்குப்பதிவு அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இரண்டு மாற்றங்கள்; லோக்சபா தேர்தலில் முடிவுகள் வந்ததும் திமுகவில் 2 முக்கியமான மாற்றங்கள் இருக்கும் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப் பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு யார் இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. லோக்சபா தேர்தல் முடிந்ததும் அந்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
இரண்டாவது மாற்றம்: சில இடங்களில் சரியாக வேலை பார்க்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். சில புதியவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆகும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications