இப்ப கு.க.செல்வம் சஸ்பெண்ட்- அப்புறம் டிஸ்மிஸ்- எம்.எல்.ஏ. பதவி குறித்து சபாநாயகர் இறுதி முடிவு!
சென்னை: திமுகவில் கலகக் குரல் எழுப்பி பாஜக பக்கம் தாவியிருக்கும் கு.க.செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவி என்னவாகும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தேமுதிக எம்.எல்.ஏ.க்கள், விஜயகாந்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர். அவர்கள் சட்டசபையில் அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்களாக இருந்தனர்.
ஆனால் விஜயகாந்த் அந்த எம்.எல்.ஏக்களை கட்சியில் இருந்து நீக்கவில்லை. ஏனெனில் அப்படி செய்தால் தமது எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகும் என்பதை உணர்ந்து விஜயகாந்த் அத்தனை சீண்டல்களுக்கும் அமைதி காத்தார்.

அன்று ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களாக இருந்தனர். அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் அனைவரும் அதிமுகவில் சமரசமாகிவிட்டனர். ஆனால் எடப்பாடி அரசுக்கு எதிராக இந்த 11 பேரும் வாக்களித்ததால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுகதான் வழக்கு தொடர்ந்தது.

திமுக எம்.எல்.ஏ .கு.க.செல்வம்
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போயிருந்தாலும் முடிவு, சபாநாயகரின் கையில்தான் என்பதுதான் கிடைத்திருக்கும் ரிசல்ட். இந்த நிலையில் தற்போது திமுகவில் ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம், அக்கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கும் சென்றார்.

திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
இந்நிலையில் கு.க.செல்வத்தை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக முறைப்படி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், கு.க.செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிஸ்மிஸ், டிஸ்குவாலிபிகேசன் மனு
இந்த நோட்டீஸுக்கு கு.க.செல்வம் விளக்கம் அளித்தாலும் அளிக்காமல் போனாலும் கூட, சட்டப்பூர்வமான கால அவகாசத்துக்குப் பின்னர் கு.க.செல்வம், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை கழகம் அறிவிக்கும். அதே கையோடு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்; எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடமும் ஒரு மனுவை திமுக கொடுக்கும்.
Recommended Video

சபாநாயகர் கையில் முடிவு
இம்மனு மீது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்பதை வைத்துதான் கு.க.செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவிக்கான விடை கிடைக்கும். ஒருவேளை திமுக கோரிக்கையை சபாநாயகர் தனபால் கிடப்பில் போட்டால், சட்டசபையில் ரெக்கார்டுகளின்படி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தாலும்- நடைமுறையில் பாஜக ஆதரவு திமுக எம்.எல்.ஏ. என்றே கு.க. செல்வம் அழைக்கப்படுவார். இது திமுகவுக்கு மேலும் தர்மசங்கடத்தையும் நெருக்கடியையும் தரக்கூடியதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications