நிதின் கட்காரி பிரதமராக திமுக ஆதரவு? க்ரீன் சிக்னல் கொடுத்தது அறிவாலயம்?
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு முன்பே மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் அரசியல் கட்சிகள் படு சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரையில் பாஜகவில் மோடி அல்லாமல் நிதின் கட்காரி போன்ற ஒருவரை பிரதமராக்க முன்வந்தால் ஆதரவு கரம் நீட்டவே செய்யும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
பாஜக கடந்த தேர்தலைப் போல தனிப்பெரும்பான்மை நிச்சயம் கிடைக்காது என்பது அக்கட்சியினரே அறிந்த ஒன்று. 200-க்கும் அதிகமான இடங்களை பிடித்தால் மாநில கட்சிகளை வளைத்துப் போட்டு ஆட்சியை தொடரவே பாஜக விரும்பும்.
பாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டுவதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவை நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. பிஜூ ஜனதா தளமும் இந்த வரிசையில் இடம்பெறலாம்.

மிதவாத தலைவர்களுடன் இணக்கம்?
இந்த கட்சிகளைப் போல திமுகவும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்காது என திட்டவட்டமாக கூறவே முடியாது. பிரதமர் மோடியை மட்டும் மிகக் கடுமையாக விமர்சித்து வரும் திமுக, பாஜகவின் மிதவாத தலைவர்களுடன் தொடர்ந்து இணக்கமாகவே இருந்து வருகிறது. திமுகவின் டெல்லி முகங்கள் இந்த வேலையை கனகச்சிதமாக செய்து வருகின்றனர்.

நிதின் கட்காரி பிரதமர்?
பாஜகவில் தற்போதைய நிலையில் மோடியைத் தவிர்த்து ஆர்.எஸ்.எஸ். செல்லப்பிள்ளையான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கான ரேசில் இருக்கிறார். நிதின் கட்காரியே இதை பலரிடமும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக மாமாங்கமாக சொல்லி வரும் உச்சநடிகரிடமும் கூட அடுத்த பிரதமர் பதவி எனக்குத்தான்.. நீங்க கட்சி ஆரம்பித்தால் உதவியாக இருக்கும் என்று கூட பேசிப் பார்த்திருக்கிறார் கட்காரி. ஆனாலும் உச்சநடிகர் இன்னமும் 'மலை' இறங்காமல் இருக்கிறார்.

துடியாய் துடிக்கும் திமுக தலைவர்கள்
திமுக முன்னிறுத்தும் டெல்லி முகமும் நிதின் கட்காரியின் இணைப்பில் இருந்து வருகிறார். அதிகாரத்துக்காக துடித்துக் கொண்டிருக்கும் திமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் பாஜகவை ஆதரிக்கும் ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதை நழுவ விடப்போவதில்லை. அனைத்து இடத்திலும் துண்டு போட்டு வைப்பதன் மூலம் இழந்த அதிகாரத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதுதான் 2-ம் கட்ட தலைகளின் போராட்டம்/

வந்து விழும் பசப்பு வார்த்தைகள்
இந்த போராட்டத்தில் கொள்கையும் கோட்பாடும் தூக்கி வீசப்பட்டு விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்போது, தேசத்தின் நலன், நிலையான ஆட்சி, கெட்ட கட்சிதான்.. ஆனால் ரொம்ப நல்லவர், மென்மையான பிரதமர் என்கின்ற பசப்பு வார்த்தைகள் ஏராளமாக வந்து கொட்டும். கருணாநிதியின் அந்த காலத்து வார்த்தைகளை நம்பிய திமுகவினரும் தமிழக மக்களும் ஸ்டாலின் இந்த கால 'அதிகாரத்துக்காக' வியூகத்தை ஏற்பார்களா? புறக்கணிப்பார்களா? என்பதை காலம் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications