என்ன ஆச்சு துரைமுருகனுக்கு?.. ஆளையே காணோமே.. பல நிகழ்வுகளில் மிஸ்ஸிங்!
தீவிர சிகிச்சைக்கு பிறகு வேலூரில் ஓய்வில் உள்ளார் துரைமுருகன்
Recommended Video
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? என தெரியவில்லை. சில நாட்களாக நடந்து வரும் திமுகவின் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர் மிஸ்ஸிங்!
கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அழுகையோ, சிரிப்போ எல்லாமே இவருக்கு ஒன்றுதான். வெளிப்படையான இவரது குணம் அனைவரையுமே ஈர்க்கக்கூடிய ஒன்று.
இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. திமுகவில் மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளிலும். ஜெயலலிதாவே துரைமுருகன் பேசினால் ரசித்துக் கேட்பார். சிரிக்கவும் செய்வார். துரைமுருகனும் கூடுதல் உற்சாகத்துடன் பேசுவார், யாராவது தன்னை ரசிக்கிறார்கள் என்றால்.

கருணாநிதி மறைவு
நிறைய உணர்ச்சி வசப்பட்டாலும், இவரிடம் ஹியூமர் சென்ஸ்தான் அதிகம். எப்போதுமே கலகல பேச்சுதான், கலகல பேட்டிதான். அறிவாலயம், கோபாலபுரம் போன்ற இடங்களில் எல்லாம் சிரிப்பு சத்தம் வெடித்து கேட்கிறது என்றால் அங்கே துரைமுருகன்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.

ரசிகர் கூட்டம்
கருணாநிதிக்கு துரைமுருகன் பேச்சு என்றால் ரொம்ப பிடிக்கும். சில சமயங்களில் துரைமுருகனை அழைத்து உட்கார சொல்லி பேச சொல்லிகூட கேட்பாராம். சட்டசபையில் இவரது பேச்சுக்கென்றே அனைத்து கட்சிகளிலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் பல தருணங்களில் மனம் கலங்கி கதறியும் அழுதிருக்கிறார். குறிப்பாக கருணாநிதி மறைவிலிருந்தே இவரது கண்ணீரை பார்க்க முடிகிறது.

கண்ணீர் சிந்தினார்
சபையில் கருணநிதிக்கு இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தும்போது, நிறையவே உணர்ச்சிவசப்பட்டு பேசினார். "எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் கலைஞர்தான். நான் அன்று இறந்திருந்தால் என் உடல் மேல் அவர் கண்ணீர் சிந்தி இருப்பார். ஆனால் என்னுடைய துர்பாக்கியம் என் தலைவர் உடல் மீது நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டது" என்று நா தழுதழுக்க தொடர்ந்து பேச முடியாமல் நின்றார். அவரை பார்த்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்டாலின் உட்பட உறுப்பினர்களும் கண்கலங்கி விட்டனர்.

சிறுநீரக தொற்று
ஒருபக்கம் உணர்ச்சிவசப்படுவது இருந்தாலும், மறுபக்கம் அவருக்கு இருதய தொந்தரவும் இருக்கிறது. தேர்தல் ரிசல்ட் அதாவது கடந்த 23-ம் தேதி துரைமுருகனுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இதனால் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

மன உளைச்சல்
திமுக வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்று கொண்ட நிகழ்வில்கூட துரைமுருகன் கலந்து கொள்ளவில்லை. என்னதான் கட்சிக்கு வெற்றி என்றாலும், தனது மகனை தேர்தல் களத்தில் நிறுத்த முடியவில்லை. இதில் ஏற்கனவே மன உளைச்சலில்தான் இருந்தார் துரைமுருகன்.

கலகலப்பு
இப்போது சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை ஓரளவு தேறி உள்ளதாக தெரிகிறது. ஆனால் காய்ச்சல் மட்டும் இன்னும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. அதனால் சென்னையிலேயே தங்கி அப்போல்லோவில் உடல்நிலையை சோதனை மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் பூரண குணமடைந்து துரைமுருகன் திரும்பவும் வழக்கமான கலகலப்புடன் கலக்குவார் என திமுக தொண்டர்கள் நம்பிக்கையில் காத்துள்ளனர்!












Click it and Unblock the Notifications