உதயநிதியா இது? "அண்ணா.. இதான் பிரச்சனை".. மினிஸ்டரை கூட்டிட்டு வர்றேன்.. அப்படியே மலைத்த சேப்பாக்கம்
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி நேரில் சென்று ஆய்வு செய்தார்
சென்னை: புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு ஹவுசிங் போர்டில் தேங்கியுள்ள குப்பையை பார்த்ததுமே டென்ஷன் ஆகிவிட்டார் உதயநிதி.. "இந்த குப்பையெல்லாம் கிளீன் பண்ணுங்க" என்று அதிரடியாக அதிகாரிகளிடம் உத்தரவிட்டதை பார்த்து தொகுதி மக்கள் வியந்து போய்விட்டனர்.
Recommended Video
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.. குறிப்பாக, ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அந்த தொகுதியின் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை, லாயிட்ஸ் கார்னர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி-பருப்பு-மளிகை சாமான்கள் போன்ற நிவாரணப் பொருட்களையும் இரவு உணவையும் வழங்கினார்...

இரவு உணவு
அத்துடன் திருவல்லிக்கேணி, அயோத்திக்குப்பம் நீலம் பாஷா தர்கா பகுதி ஏழை-எளிய மக்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக அரிசி-பருப்பு-மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களையும்-இரவு உணவையும் உதயநிதி வழங்கினார். புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு மக்களுக்கு நேற்று கொரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்கிய போது, ஒருபெண்மணி உதயநிதியிடம் வந்தார்..

சாக்கடை
"இங்கே பல வருஷமாக குப்பை தேங்கி கிடக்கு.. இந்த நாற்றத்தில் எங்களால வாழவே முடியல" என்றார். இதையடுத்து, குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்ததை நேரில் பார்த்த உதயநிதி, மாநகராட்சியில் அதிகாரிகளிடம் "உடனே இந்த குப்பையெல்லாம் எடுங்க, தொற்று காலத்தில் இப்படியா இருக்கிறது" என்று சொல்லி அனைத்தையும் சுத்தம் செய்ய வைத்தார்.

குப்பை
அதேபோல, நேற்று 2வது நாளாக புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்குள் சென்றார் உதயநிதி.. அந்த பகுதியில் காலையே வைக்க முடியவில்லை.. குப்பை, கூளங்கள், சாக்கடை நீர் வழிந்தோடியபடி அந்த இடம் காணப்பட்டது.. ஆனால், சாக்கடை என்றும் பாராமல், அதிலேயே நடந்து சென்று ஆய்வு செய்தார் உதயநிதி.

புகார்
அப்போது, அந்த குடியிருப்பு பெண்கள் அனைவரும் திரண்டு வந்து, புகார்களை தெரிவித்தனர்.. அப்போது ஒரு பெண், 'அண்ணா.. குப்பையை நடுவழியிலேயே கொட்டறாங்க, இந்த பகுதியில் டிரைனேஜ் தான் முக்கிய பிரச்சனையா இருக்கு" என்றார்.. அதற்கு உதயநிதி, "கொரோனா கொஞ்சம் குறையட்டும், அமைச்சரை கூட்டி வருகிறேன்.. எல்லாம் சீக்கிரத்தில் சரிசெய்து தரப்படும்" என்றார்.

அசால்ட்
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த சூழலில், அதிகாரிகளே கால் வைக்க தயங்கும் பகுதியில், மாநகராட்சி ஊழியர்களே உள்ளே வருவதற்கு தயங்கும் பகுதிகளுக்குள் அசால்டாக நடந்து சென்று உதயநிதி ஆய்வு செய்தது அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தியது.. காரில் ஏறி சென்று கிளம்பும்போது ஒரு பெண்மணி, "இதுவரைக்கும் இப்படி யாருமே இங்கே வந்தது இல்லை.. நீங்கதான் முதல்முறையா இங்கே வந்திருக்கீங்க.. ரொம்ப பெருமையா இருக்கு சார்" என்றார்.

பாராட்டு
புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் தேங்கியுள்ள குப்பையை அகற்றும் பணியை உதயநிதி பார்வையிட்டதும், அப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியதும், அந்த பகுதி மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications