திருமாவின் ‘பானை’ சென்டிமென்ட்? முட்டுக்கட்டையாக ஆதவ்? சரண்டர் ஆகுமா விசிக?
சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன.
திமுக கூட்டணியில் மிக பலம் வாய்ந்த கட்சியாக விசிக இருக்கிறது. வெறும் அரசியல் கூட்டணி என்பதைத் தாண்டி, திருமாவளவனுடன் ஒரு நெருக்கத்தை திமுத தலைவர் ஸ்டாலின் கடைப்பிடித்து வருகிறார்.

அதற்குக் காரணம் வெளிப்படையானது. பாமகவை நம்புவது அரசியல் ரீதியாக ஆபத்தானது என்பது திமுக மேலிடத் தலைவர்களின் நம்பிக்கையாக உள்ளது. தேர்தல் காலத்தில் மணக்க மணக்கப் பேசும் டாக்டர் ராமதாஸ், தேர்தல் முடிந்த அடுத்த நாளே விமர்சிக்கத் தொடங்கி விடுவார். அதற்குக் கடந்த கால திமுக- பாமக கூட்டணி உறவு சம்பவங்களே சாட்சி.
அந்த மாதிரி இல்லை விசிக. தேர்தல் கால கூட்டணியைக் கடந்து இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல தோழமை உள்ளது. அதைப்போல திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, வலது- இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் எனச் சகல மட்டத்திலும் ஒரு தோழமையை உருவாக்கி வைத்துள்ளார் திருமா.
ஆகவே, அந்தக் கூட்டணிக்குள் விசிகவை விடாமல் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அப்படி ஒரு சுமுகமான உறவு இருந்து இன்னும் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

அதற்குக் காரணம் பொதுத்தொகுதி. விசிக இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் 2 சீட்டு என்று நிலையைத் தாண்டு 4 என்று உயர்ந்துவிட வேண்டும் என்று கணக்குப் போட்டு வேலை செய்து வருகிறது. அதற்கான வாக்கு வங்கியையும் அக்கட்சி உருவாக்கி வைத்துள்ளது.
அதனடிப்படையில் பொதுத் தொகுதியை 'குறி' வைத்துக் காய் நகர்த்துகிறது. விசிக பொதுத்தொகுதி கேட்பது முதல்முறை அல்ல. அதை திருமாவளவனே விளக்கி இருக்கிறார்.
"தேர்தல் பாதைக்கு வந்து எப்போது கூட்டணி வைக்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே பொதுத்தொகுதி கேட்டு வருகிறோம். மூப்பனாருடன் இருந்தபோதே கேட்டுள்ளோம். அது 1999இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிருந்து வைக்கப்பட்டு வரும் கோரிக்கைதான். இது புதிய கோரிக்கை அல்ல.
நாங்கள் கேட்டதால் கடந்த காலங்களில் எங்கள் கட்சிக்கு பொதுத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் யூசுப் போட்டியிட்டார். சோழிங்கநல்லூரில் எஸ்.எஸ்.பாலாஜி போட்டியிட்டார். புவனகிரியில் சிந்தனைச் செல்வன் போட்டியிட்டார்" என்று ஒரு பட்டியலை அவர் அளித்துள்ளார்.

ஆனால், பிரச்சினை இப்போது சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தொகுதி கேட்பது என்பது வேறு. நாடாளுமன்றத்தில் பொதுத் தொகுதி கேட்பது என்பது வேறு. அந்த இடத்தில்தான் திமுகவுக்குச் சின்ன சங்கடம் உருவாகி உள்ளது.
இந்த முறை மீண்டு திருமாவளவன் அதே சிதம்பரம் தொகுதியில் நிற்கிறார். 'அது எனது சொந்த தொகுதி. அதை விட்டால் நான் எங்கே போவது?' என்று கேட்டு ஆதங்கத்தையும் முன்வைத்திருக்கிறார் அவர்.
ஆக, தொல்.திருமாவளவன் மற்றும் து. ரவிக்குமார் ஆகிய இருவரும் நிற்பது உறுதி. மீதம் ஒரு தனித் தொகுதி, ஒரு பொதுத்தொகுதி விசிகவின் கனவு. ஆனால், 2 சீட்டுக்களைத் தாண்டுவதாக திமுக இரண்டாம் கட்ட தலைவர் இல்லை. மேலும் பொதுத்தொகுதி என்பதற்கு அவர்களின் மனம் இறங்குவதாக இல்லை.
அதற்குக் காரணம், அந்த ஒரு பொதுத் தொகுதி ஆதவ் அர்ஜுனா. அவரை இந்த முறை சிறுத்தைகள் சார்பாக நாடாளுமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என விசிக விரும்புகிறது. விசிக என்றால் தொல். திருமா மட்டும்தான். அங்கே உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அது விருப்பமாக இல்லை.

செல்வாக்கு உள்ள ஒரு பின்புலம் கொண்டவர் கட்சிக்குள் இருந்தால், அது கட்சியின் வைட்டமின் தேவையை மேம்படுத்த உதவும் என்று கட்சி மேலிடம் நினைப்பதில் தவறில்லை.
பிரச்சினை எங்கே என்றால், ஆதவ் அர்ஜுனா, திமுகவின் முதல் குடும்பத்திற்கு நெருக்கமானவர். அவர் திடீரென்று விசிக பக்கம் போய் காய்நகர்த்துவதுதான் அந்தத் தரப்புக்கு வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார்கள்.
பொன் முட்டை இடும் வாத்தை யார்தான் விட்டுத் தருவார்கள்? ஆகவே, 3 தனித் தொகுதிக்குக் கூட திமுக கடைக்கண் காட்ட விரும்புகிறது. ஆனால், ஆதவ் அர்ஜுனாவுக்காக ஒரு பொதுத் தொகுதியைப் பிரிக்கத் தயங்கி வருகிறது என்கிறார்கள் உபிகள்.
இந்தக் குற்றச்சாட்டுகளை திருமா மறுக்கிறார். ஆதவ் கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் கட்சியுடன் சேர்ந்து பயணித்து வருகிறார். 'விசிகவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், சகித்துக் கொள்ள முடியாதவர்கள் இந்தக் கருத்தைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள் என்றார்.

அதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் கடந்த 5 ஆண்டுகளாக திமுகவுடனும் பயணித்து வந்துள்ளார் என்பதைத்தான். ஆக, கூட்டணி உறுதியாவதில் முதல் முட்டுக்கட்டை ஆதவ் தான் என்கிறார்கள்.
அடுத்து முட்டுக்கட்டை தனிச் சின்னம். ஜனநாயக பாதையை அதிகம் வலியுறுத்தும் திமுக அதற்குத் தடைபோடவில்லை. கடந்த முறைகூட உதயசூரியன் சின்னத்தில் நிற்பது ரவிக்குமாரின் விருப்பமாகவே இருந்துள்ளது. அவரை திமுக வற்புறுத்தவில்லை என்றே சொல்கிறார்கள்.

கடந்த பல தேர்தல்களில் விசிக விதவிதமான சின்னங்களில் போட்டியிட்டுள்ளது. இரட்டை மெழுகுவர்த்தியில் போட்டியிட்டுள்ளது அந்தக் கட்சி. பின்னர் மோதிரம் சின்னத்தில் நின்றது. கடைசியாகத்தான் பானை சின்னம் அவர்களுக்குக் கிடைத்தது.
அதையே ஏன் விரும்புகிறார்கள் என்றால் அந்தச் சின்னம் கிடைத்த பாமர மக்கள் மத்தியில் கூட வேகமாகப் போய்ச் சேர்ந்தது. அதைவிடச் சிறப்பு என்னவென்றால் திருமாவளவனுக்கு அந்தச் சின்னம்தான் 5 லட்சம் வாக்குகளைப் பெற்றுத்தந்தது.













Click it and Unblock the Notifications