கரூர் விவகாரம்.. ஒவ்வொரு நாளும் முடிச்சுகளை அவிழ்க்கும் திமுக.. விஜய்க்கு அதிகரிக்கும் நெருக்கடி!
சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக திமுக தரப்பில் வீடியோவுடன் கூடிய ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பாக அமுதா ஐஏஎஸ் தரப்பில் விளக்கம் கொடுத்த நிலையில், அடுத்த நாளில் செந்தில் பாலாஜி நேரடியாக செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று செருப்பு வீசிய இளைஞரின் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விஜய் இதுவரை வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களையும் தவெக சார்பாக இதுவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறவில்லை. தவெகவின் 2ஆம் கட்ட நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகி இருப்பது அக்கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் விவகாரத்திற்கு திமுக தான் காரணம் என்ற நோக்கில் சோசியல் மீடியாவில் ஏராளமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தவெக தலைவர் விஜய்யும் கூட, சிஎம் சார்.. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால், என் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சீண்டினார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு இரங்கல் கூட்டத்தை கூட தவெக சார்பாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் திமுக தரப்பில் ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் விஜய் வீடியோ வெளியிட்டார். விஜய் வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஊடகப் பிரிவு செயலாளர் அமுதா ஐஏஎஸ் தலைமையில் வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.
அப்போது ஆம்புலன்ஸ் வந்தது ஏன்?, போலீசார் எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை செயலர் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் விளக்கம் அளித்தனர். இதன்பின் தவெக சார்பாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், அவர் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து செருப்பு வீச்சு சம்பவம் முதற்கொண்டு விளக்கம் கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் நேற்று விஜய் மீது செருப்பு வீசிய இளைஞரின் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் விஜய்யின் கவனத்தை ஈர்க்க செருப்பு வீசியது வெளிப்படையாகவே தெரிந்தது. விஜய் மீது செருப்பை வீசிய இளைஞர், 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கதறுகிறார். இதன்பின்னரே விஜய் அந்தப் பக்கம் திரும்பி தண்ணீர் பாட்டில்களை வீசுகிறார்.
இதனால் விஜய் மீது வேண்டுமென்றே செருப்பு வீசியதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் அடிபட்டுவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விஜய்க்கு எதிராக திமுக தரப்பில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கரூருக்கு விஜய் செல்வதும் தாமதமாகி வருகிறது. இதனால் கரூர் விவகாரத்தில் திமுக சரியான பாதையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications