துணிச்சலாக எதிர்கொள்வோம்.. திமுக துணை நிற்கும்.. பொன்முடிக்கு நம்பிக்கை அளித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அமைச்சர் பொன்முடிக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என்றும் பொன்முடிக்கு முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டுவரை நடந்த திமுக ஆட்சி காலத்தில், கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்தான் அமைச்சர் பொன்முடி. பின்னர் திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, அதிமுக ஆட்சியை பிடித்தது. அந்த நேரத்தில், அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரியில் மண் எடுக்க அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசுக்கு 28 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டில் பொன்முடி மீதும், அவரது மகன் கௌதம் சிகாமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டை வீட்டில் சோதனை தொடர்ந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு, பொன்முடியை அழைத்துச் சென்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் இதே போல தொடர் சோதனைகள் நடந்தது, பின்னர் நுங்கம்பாக்கம் அழைத்துச் செல்லப்பட்டார். அதே பாணியில்தான் பொன்முடியும் கைது செய்யப்படக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில், அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக இருந்த 7 மணி நேரமும் பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. விடிய விடிய நடந்த விசாரணையின் இறுதியில், அமைச்சர் பொன்முடியின் மீது கைது நடவடிக்கை இல்லை என தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அதிகாலை 3:30 மணிக்கு அளவில் வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி. அதே நேரத்தில் அவரது வீட்டில் நடந்த சோதனையும் முடிவுக்கு வந்தது.
இந்த ரெய்டு பற்றி நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எதிர்கட்சிகள் தங்கள் அணியை வலுப்படுத்தி வருகின்றன. அதைப்பார்த்து பாஜக எரிச்சலைடைந்து வருகிறது. மோடி தலைமையில் இருக்கிற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.
அதை தொடர்ந்து, இரண்டு நாட்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் 24 கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பீகாரிலும், தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பாஜவை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் இது. பாஜ ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இது. அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவப்பட்டு, ஏற்கனவே வடமாநில பகுதிகளில் அந்த பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும், அந்த பணியை தொடங்கி இருக்கிறார்கள். ஆகவே அதைப்பற்றியெல்லாம் கிஞ்சுற்றும் திமுக கவலைப்படவில்லை.
உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில், அமலாக்கத் துறையின் மூலமாக சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், இந்த வழக்கை பொறுத்தவரையில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டு காலத்திற்கு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அதிமுக தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், இதைப்பற்றி எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை. அண்மையில் கூட பொன்முடி மீது கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே, இந்த வழக்கை பொறுத்தவரையில் சட்டரீதியாக அவர் இதனை நிச்சயமாக சந்திப்பார் என்று கூறினார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பொன்முடியுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் பேசி அமலாக்கத்துறை நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அமைச்சர் பொன்முடிக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications