சென்னை திருவேற்காடு நகராட்சி திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்... சிக்க வைத்த கணவர்.. வெளியான தகவல்
சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சி 10-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட என்ன காரணம் என்பதும் வெளியாகி உள்ளது..
சென்னையில் வானகரத்தை அடுத்து உள்ளது திருவேற்காடு நகராட்சி. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த பகுதி சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றாகும்.. மொத்தம் இங்கு 18 வார்டுகள் உள்ளன. கடந்த முறை நடந்த நகராட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன.

திருவேற்காடு நகராட்சியில் 10-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த நளினி குருநாதன் என்பவர் வெற்றி பெற்றார். இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டிருக்கிறார்.
தகுதி நீக்கம் செய்யப்பட என்ன காரணம்: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதாக எழுந்த புகாரின் பேரில், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து நளினி குருநாதன் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு நகராட்சி கமிஷ்னர் அனுப்பி உள்ளார்.
குப்பை எடுக்கும் டெண்டர்: திமுக பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்திருக்கிறார்.. கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது அப்பட்டமான விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தாராம்.
மேலும் கவுன்சிலரின் கணவரான குருநாதன், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு உள்ளது.
தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு நளினி மற்றும் குருநாதன் ஆகியோர் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த நளினி குருநாதன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று அளித்தார். இந்நிலையில் கவுன்சிலர் நளினி குருநாதன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்: மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 51 கீழ் ஒன்றின்படி தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாத மாமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய முடியும்.. அதேபோல் கவுன்சிலர்கள், தங்கள் குடும்பத்தை வைத்தே அரசின் டெண்டர் எடுக்க முடியாது.. அப்படி முறைகேடு செய்தாலும் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications