சவேரா ஹோட்டலில் திமுக மகளிரணிக் கூட்டம்... வகைவகையான மதிய உணவுகள்
சென்னை: திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான சவேராவில் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதில் அனைத்து நிர்வாகிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு தந்து கருத்துக்களை கேட்டறிந்தார் கனிமொழி எம்.பி.
இதனிடையே ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் மீன், இறால், சிக்கன், மட்டன் என வகைவகையான பாதர்த்தங்களுடன் பஃபேட் முறையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

கனிமொழி தலைமை
திமுகவில் இளைஞரணிக்கு அடுத்தப்படியாக செல்வாக்கு மிக்க அணி என்றால் அது மகளிரணி தான். கனிமொழி தலைமையில் இயங்கும் அந்த அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. முன் எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார் கனிமொழி.

அனைவரும் பேச்சு
எப்போது மகளிரணி ஆலோசனைக் கூட்டம் என்றால் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ மட்டுமே அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். இன்று நடந்த கூட்டம் கிட்டதட்ட நாள் முழுவதும் நடைபெற்றுள்ளது. அதில் அனைத்து பெண் நிர்வாகிகளும் தங்களது உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளனர்.

மதிய உணவு
கூட்டம் நடைபெற்ற சவேரா ஹோட்டலிலேயே மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடல் வகை உணவுகளான இறால், மீன்கள் தொடங்கி மட்டன், சிக்கன், காய்கறி என சகலமும் அந்த விருந்தில் இடம்பெற்றிருந்தது. இது மகளிரணி நிர்வாகிகளை உற்சாகப் படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

தீவிரக்கட்சிப் பணி
மகளிரணி நிர்வாகிகள் மகளிரணிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும், அணியை பலப்படுத்த தேவையான கட்சிப் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கனிமொழி கேட்டுக்கொண்டார். ஒரு சில பெண் நிர்வாகிகள் மட்டும் மாவட்டத்தில் உள்ள லோக்கல் அரசியல் பற்றி கனிமொழியிடம் புகார் முறையிட்டனர்.












Click it and Unblock the Notifications