44வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி! படத்தில் இருக்கும் இந்த அமைச்சர் யார் தெரியுமா?
சென்னை: 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி, இன்று 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
திமுகவில் எத்தனையோ சார்பு அணிகள் இருந்தாலும் அதில் பிரதான அணியாக விளங்குவது இளைஞரணி மட்டுமே. ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய இருவர் வசம் இருந்த திமுக இளைஞரணி இப்போது கடந்த 5ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது.

நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கிய ஸ்டாலின் மாநகராட்சித் தேர்தல் பரப்புரை, ஊர் ஊராக பிரச்சார நாடகம் என கட்சிப்பணிகளில் மிகத் தீவிரம் காட்டினார். கட்சி வேலையில் ஸ்டாலினுக்கு இருந்த அதீத ஆர்வத்தை பார்த்து தான் திமுகவின் துணை அமைப்பாக 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இளைஞரணிச் செயலாளர் என்ற பொறுப்பும் அவர் வசம் கொடுக்கப்பட்டது. திருச்சி சிவா, அன்பில் பொய்யாமொழி, நாசர், பரிதி இளம் வழுதி என இளைஞர் பட்டாளத்தோடு தமிழகத்தை சுற்றி சுற்றி வந்த ஸ்டாலின் இளைஞரணியை மிக வலிமையாக கட்டமைத்தார். தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத வகையில் இளைஞர் படை திமுகவில் மிக வலிமையாக திகழ்ந்தது.
பேராசிரியர் அனபழகன் வைத்த நிதி திரட்டும் போட்டியில் மற்ற அணிகளுக்கு முன்பாக இளைஞரணி சார்பில் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டித் தந்த ஸ்டாலின், இளைஞரணிக்காக அன்பகம் என்ற அலுவலகத்தை போராடி வாதாடி பெற்றார். மேலும், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட போதும் சரி, வி.பி.சிங் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவின் போதும் சரி, இளைஞரணியின் வெண்சீருடை அணிவகுப்பு மூலம் தேசியளவில் கவனம் ஈர்த்தார் ஸ்டாலின்.
திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என எத்தனை பொறுப்புகள் இருந்தாலும் கட்சியின் இளைஞரணி தான் தனக்கு தாய் மடி என்றும், அதில் தவழ்ந்த காலத்தை இப்போது நினைத்தாலும் இனிமை தருவதாகவும் ஸ்டாலின் சிலாகித்து கூறியிருந்தார்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த அணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கடந்த காலங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது.
எல்லாம் சரி படத்தில் ஸ்டாலினுடன் இருக்கும் அமைச்சர் யார் என்பது தானே பலருக்கும் எழும் கேள்வியாக இருக்கலாம். அவர் வேறு யாருமல்ல செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தான். கல்லூரி காலம் தொட்டே தன்னை திமுக இளைஞரணியில் இணைத்துக் கொண்டு ஸ்டாலினுடன் இணைந்து அந்த அணியில் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications