அரக்கோணம் பாலியல் புகார்.. திமுக இளைஞரணி நிர்வாகி நீக்கம்.. உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை!
சென்னை: கல்லூரி மாணவி புகாரைத் தொடர்ந்து, அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார். தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி திருமண மோசடி புகார் அளித்திருந்த நிலையில், அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு கவியரசு என்பவரை நியமனம் செய்து உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பளராக இருக்கிறார். இவர் மீது அரக்கோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திருமண மோசடி புகார் கூறியதோடு, தாம் உட்பட 20க்கும் மேற்பட்ட பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக கல்லூரி மாணவி பேசுகையில், என்னிடம் வழக்கறிஞர் என்று பேசி டார்ச்சர் செய்தார். நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், உன் அம்மா மற்றும் அப்பாவை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். யாரின் ஆதரவும் இல்லாததால், என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். அவர் பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது.
அவனால் வாழ்க்கை போயிருச்சு.. படிப்பும் இல்லாமல் நிற்கிறேன். நான் மட்டுமல்லாமல் இன்னும் 15 பெண்கள் இதேபோல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் நீதி பெற்று கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதன்பின் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், என்னிடம் போலீசார் 3.30 மணி நேரம் விசாரணை நடத்தி ஸ்டேட்மெண்ட் எடுத்து கொண்டார்கள்.
ஆனால் புகாரை பெற்று கொண்டதற்கான சிஎஸ்கே காப்பியோ அல்லது எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. போலீசார் மீது நம்பிக்கை இல்லை. என்னிடம் பெற்றுக்கொண்ட ஸ்டேட்மெண்டிலும் உடன்பாடு இல்லை. யார் அந்த 15 பெண்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். நானா அவர்களை பிடித்து கொண்டு வர முடியும். தெய்வச்செயலின் செல்ஃபோனை எடுத்து பாருங்கள் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயலை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக, ம.கவியரசு அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெய்வச்செயல் திமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு, அவர் மீதான கல்லூரி மாணவியின் குற்றச்சாட்டே காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் தெய்வச்செயல் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications