திமுக இளைஞரணி குரூப் போட்டோ! ஸ்டாலின் பின்னால் நிற்க நிர்வாகிகளிடையே கடும் போட்டி!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுடன் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் மாவட்டம் வாரியாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட நிலையில், யார் எங்கே நிற்பது என்பதில் பெரும் போட்டியே நடந்தது.
மாவட்ட வாரியாக மேடைக்கு அழைக்கப்பட்ட நிலையில், குடுகுடுவென ஓடிவந்து ஸ்டாலின், உதயநிதி, பின்னால் நிற்க ஒரே இடத்திற்கு 2, 3 பேர் போட்டிபோட்டு பின்னர் அங்கிருந்த பி.எஸ்.ஓ.க்கள் மூலம் வரிசைப்படுத்தப்பட்ட நிகழ்வை காணமுடிந்தது.

அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பும் போது, அனைத்து நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் வைக்கத் தவறவில்லை. அதேபோல் ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் நிதி, புத்தகம், பொன்னாடை உள்ளிட்ட பரிசுகளை மேடைக்கு எடுத்து வந்த போது, அதையெல்லாம் தனியாக கொடுத்துக் கொள்ளலாம் இப்போது போட்டோ மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டனர்.
இதனிடையே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் ஒருவர் இல்லாத ஒரு மாவட்டத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு அதனை திரும்ப திரும்ப மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார். திருச்சி மாவட்ட திமுகவை பொறுத்தவரை வடக்கு, தெற்கு, மத்திய என மூன்றாக உள்ளது.

இந்நிலையில் திருச்சி மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மேடைக்கு வரலாம் என அந்த நபர் கூறியதால் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் குழம்பிப் போனார்கள். நெல்லை மேயர் சரவணன், தென்காசி எம்.பி. தனுஷ் உள்ளிட்டோரும் இளைஞரணியில் பொறுப்பில் உள்ளதால் அவர்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications