குழம்பினோம்... காத்திருந்தோம்... கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் என்ன செய்வோம்? -உதயநிதி
சென்னை: கொரோனா விவகாரத்தில் கைவிரிப்பது போல் முதலமைச்சர் கண்ணீர் கடிதம் எழுதினால் மக்கள் என்ன செய்வார்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட கடிதத்தை அடிப்படையாக கொண்டு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும், சொல் போதாது செயல் வேண்டும் என தமிழக அரசையும், சுகாதாரத் துறையையும் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக சாடியுள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக- மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்- மு.க.ஸ்டாலின்
கொரோனா விவகாரம்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது தனது கருத்தை ட்வீட்டர் மூலமும் அறிக்கைகள் வாயிலாகவும் பதிவு செய்து வருகிறார். மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக நின்று அதற்கான வலியுறுத்தலை அரசிடம் தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.
சுட்டிக்காட்டல்
இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வர் பேசியதை சுட்டிக்காட்டி இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். வஞ்சப்புகழ்ச்சி அணியில் முதல்வரை பற்றி உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 3 நாளில் தமிழகத்தில் கொரோனா காணாமல் போகும் என்ற முதல்வரின் அறிவிப்பை நம்பி காத்திருந்ததாகவும் ஆனால் இன்று முதல்வரின் கடிதம் கைவிரிப்பது போல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
விழித்திரு; வீட்டிலிரு
மேலும், கொரோனாவை பணக்கார நோய் என முதலமைச்சர் கூறிய போது குழம்பியதாகவும், தனித்திரு-விழித்திரு-வீட்டிலிரு என முதலமைச்சர் கூறியதை கேட்டு அதனையும் பின்பற்றியதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். இவ்வளவும் செய்தும், கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது?என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சொல் போதாது
மேலும், எதிர்க்கட்சி அஞ்சுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது தனக்கு ஆச்சரியம் அளித்ததாகவும், சொல் போதாது செயல் வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே, மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாது என முதல்வர் நேற்று உருக்கமான கடிதம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.