பிரதமர் மோடி சீன அதிபரோடு 18 முறை சந்திப்பு... 5 முறை சீனா பயணம்... ஆனாலும் என்ன பயன்? -உதயநிதி
சென்னை: கடந்த 70 ஆண்டுகளில் எந்த இந்திய பிரதமரும் மோடியை போல் 5 முறை சீனா சென்றதில்லை என்றும், 18 முறை சீன அதிபரை சந்தித்து பேசியதில்லை எனவும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீன அதிபரை இத்தனைமுறை சந்திக்காத, சீனா செல்லாத பிரதமர்களால் வளர்க்கப்பட்ட இருதரப்பு நல்லுறவை, பலமுறை சீனா சென்ற மோடியால் ஏன் பேணமுடியவில்லை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;

ஏன் தெரிவிக்கவில்லை?
இந்திய-சீன ராணுவ வீரர்களுக்குள் 50 நாட்களாக கைகலப்பு, சச்சரவு. ‘நம் பிரதமர் இதுபற்றி மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை' என்றால், ‘நீ தேச துரோகி' என்கிறது பாஜக. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தேசமே ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றுகிறது, அவர்களின் பின்னால் நிற்கிறது. பாஜகவின் பின்னாலல்ல.

ஒப்பந்தத்துக்கு பணிந்து
1960க்கு பிறகு இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே நேரடி மோதல் இல்லை. 1975ல் சீன தாக்குதலுக்கு 4 இந்திய வீரர்கள் இறந்தனர். எல்லையில் சில கைகலப்புகள் நடந்திருந்தாலும் 40 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் அது உயிரிழப்புவரை சென்றுள்ளது. விலைமதிப்பற்ற நம் ராணுவ வீரர்கள் 20 பேரை இழந்துள்ளோம். ‘சீனாவுடனான மோதலில் நம் வீரர்களிடம் ஆயுதம் இருந்தது. ஒப்பந்தத்துக்கு பணிந்து அவற்றை பயன்படுத்தவில்லை' என்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

18 முறை சந்தித்து என்ன பயன்?
இதுதான் ‘ராணுவ ஒழுங்கு'. இத்தியாகத்துக்கு ஈடே கிடையாது. இதையும் பாஜகவினர் தங்களின் தியாகம் போல் பேசுவது அவ்வீரர்களுக்கு செய்யும் துரோகம். மோடி, 6 ஆண்டுகளில் சீன அதிபரை 18 முறை சந்தித்துள்ளார், 5 முறை சீனா சென்றுள்ளார். 70 ஆண்டுகளில் எந்த பிரதமரும் இத்தனைமுறை சீனா சென்றதில்லை. சீன அதிபரை இத்தனைமுறை சந்திக்காத, சீனா செல்லாத பிரதமர்களால் வளர்க்கப்பட்ட இருதரப்பு நல்லுறவை, பலமுறை சீனா சென்ற மோடியால் ஏன் பேணமுடியவில்லை?

ரூ.1700 கோடி ஒப்பந்தம்
‘தற்சார்பு பொருளாதாரம்' என்கிற மோடி அரசு, நம் ராணுவ வீரர்களை சீன வீரர்கள் தாக்கிய சில நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 13ம் தேதி அதே சீன நிறுவனத்துடன் 1700 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடுகிறது. பாஜகவினர் இப்போது, ‘சீன பொருட்களை புறக்கணியுங்கள்' என்கின்றனர். யார் உண்மையான தேச துரோகி?
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் வினவியுள்ளார்.












Click it and Unblock the Notifications