சி.என்.அண்ணாதுரை..சி.எம் ஆன கதை! பெரியாரின் தளபதியின் 55வது நினைவு நாள் - இன்று திமுகவினர் பேரணி
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் இன்று அமைதி பேரணியை திமுகவினர் நடத்தியுள்ளனர்.
அண்ணா நினைவு நாளில் அமைதி பேரணியை திமுக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறது. சி.என்.எ என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் தளபதி. பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான்.

பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற தனி கட்சி கண்டார். இருந்த போதிலும் பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார்.
ஆட்சிக்கு வந்த உடன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 'தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த 'கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்' என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, 'தமிழக அரசு' என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த 'சத்யமேவ ஜயதே' என்ற வடமொழி வாக்கியம், 'வாய்மையே வெல்லும்' என்று தமிழில் மாறியது.
இப்படியாக கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்திவந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்ற முயன்றது அண்ணாவின் கட்சி. எல்லாமும் சரியாக போய்க்கொண்டிருக்க காலம் அவரை தனக்குள் ஈர்த்துக்கொண்டது. 1967ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், அப்பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
இவரது தியாகத்தையும், பணிகளையும் நினைவுகூரும் விதமாக அவரது நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் சென்னையில் திமுக அமைதி பேரணியை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் இன்று இந்த பேரணி நடைபெற்றிருக்கிறது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அங்கு அண்ணாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில்,
"ஸ்பெயின் நாட்டில் தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சந்திப்புகளும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெய்னில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில்தான். அண்ணா அவர்களின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி, மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கம்.
இந்த முறை, கழக உடன்பிறப்புகளாம் உங்களுடன் வருவதற்கான சூழல் அமையவில்லை. எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். அண்ணா வழியில் அயாராது உழைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு தி.மு.கழகத்திற்கு இருக்கிறது" என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு அமைதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications