லோக்சபா தேர்தலில் அண்ணாமலை போட்டி? வந்து விழுந்த கேள்வி.. சற்றும் யோசிக்காமல் அவரே சொன்ன பதில்
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் எனத் தகவல் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடக்கும் நிலையில், இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என தகவல் பரவி வருகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது குறித்து விளக்கி இருக்கிறார்.

அண்ணாமலை: இதற்கிடையே லோக்சபா தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "நாம் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு லோக்சபா தேர்தல் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
மக்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். மக்கள் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் வரவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நமது தமிழகத்தில் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றியை பாஜக பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் சிறப்பான வெற்றியைக் கொடுக்க இங்குள்ள மக்கள் தயாராக உள்ளனர்.
100 நிமிடங்களில் நடவடிக்கை: இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் பரிசுப் பொருட்கள், வாக்குக்குப் பணம் என்று விண்ணை முட்டும் அளவுக்குச் செலவு செய்வார்கள்.. இத்தனை காலம் நாம் அதைப் பார்த்துள்ளோம். ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் இரண்டு மூன்று விஷயங்களை மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். பண விவகாரங்களைத் தீவிரமாகக் கண்காணிப்போம் என்றும் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 6 விதமான புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் எடுப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அதேநேரம் 85 வயதுக்கு மேல் இருக்கக்கூடிய முதியவர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்கின்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். மேலும், 40% மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தலுக்குக் குறைவான நாட்கள் இருக்கிறது. இங்கே எப்போதும் இரண்டாவது கட்டத்தில் தான் தேர்தல் வரும். ஆனால், இப்போது திடீரென அறிவித்துள்ளார்.
நேர்மையான தேர்தல்: எல்லா கட்சிகளுக்கும் லெவல் ஃபீல்டு தான். வரும் நாட்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். பொதுமக்களைச் சந்தித்து நம்முடைய மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். நம்முடைய மாநிலத்தில் இந்த முறை நேர்மையாகத் தேர்தல் நடக்கும். Money power, Muscule power இல்லாமல் நடந்த தேர்தலாக இது இருக்கும்" என்றார்.
லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு இடைத் தேர்தலும் நடக்கும் நிலையில், அங்கே பாஜக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, "விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டுவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. மிக விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். பாஜகவின் கூட்டணியில் தமிழ்நாட்டில் யார் யார் கூட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை உரிய நேரத்தில் சொல்கிறோம்
அண்ணாமலை போட்டியா: இந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என்பது 3 நாட்களில் தெரிய வரும். தேர்தல் களத்தில் சவாலாக எதையும் பார்க்கவில்லை, களம் எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது, ஆளும் கட்சி இங்கு எவ்வளவு, பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்ற கனவு காணுகிறது. தேர்தலுக்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி பாஜக நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications