ஸ்டாலின் அதிரடி.. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றாதீங்க.. மத்திய அரசுக்கு தடாலடி "கோரிக்கை"
சென்னை: திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தயவு செய்து இங்குள்ள ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றி விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமணவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தலைமையேற்று பேசினார். அப்போது அவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி முதன் முதலில் 33 சதவித இட ஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று சொன்னபோது மற்ற எந்த மாநிலமும் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற முன்வரவில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டை முதல் மாநிலமாக நிறைவேற்றியது தமிழகம் தான். அப்போது முதல்வராக கலைஞர் இருந்தார். ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தான் திராவிட மாடல்.

திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கட்டும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தயவு செய்து இங்குள்ள ஆளுநரை மட்டும் என்றைக்கு மாற்றி விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்.
இன்றைக்கு யார் யாரோ பெரிய பெரிய பதவியில், பெரிய மாளிகையில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இப்படி கேட்பவர்களின் பதவி என்பதே வேஸ்ட். திராவிடம் என்றால் என்ன என்று உங்களை கேட்கவைத்துள்ளது தான் திராவிடம். திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரச்சாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல், பிரபலம் அடைகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களாக ஆளுநர் புருடா வீட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசுவதை மக்கள் பொருட்படுத்தவில்லை என்று கூறிய முதல்வர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நான் கேட்டுக்கொள்வது, இங்கு இருக்கக்கூடிய ஆளுநரை என்றைக்கும் மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது அவர் இருக்கட்டும். அவர் இருந்தால் எங்களுக்கு பல சௌகரியம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட உறுதி மொழிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் நிச்சயமாய், உறுதியாய் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாக்கிக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், மணமக்களிடம் அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications