அந்த வலையில் மட்டும் மாட்டிக்காதீங்க.. எதிர்காலமே போயிடும்.. எடப்பாடி வார்னிங்.. என்ன ஆச்சு?
சென்னை: அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், எடப்பாடி பழனிச்சாமியைத் தவிர அதிமுக தலைவர்கள் பலரும் கவலையடைந்து வருகின்றனர். அதிமுகவின் மா.செ. க்களிடமும் இந்த கவலை நீடித்திருக்கிறது. வட தமிழகத்தைச் சேர்ந்த மா.செ. க்கள் பலர், கே.பி.முனுசாமியிடம் இது குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.

திமுக மிக வலிமையாக உள்ளது
அவரிம் பேசும் மா.செ.க்கள், ''திமுகவிற்கு மிக வலிமையாக இருந்தது அதன் கூட்டணிக் கட்சிகள் தான். கூட்டணியை முன்னிறுத்தியே திமுக வலிமையாக இருந்தது. அதனை விஜய் உடைத்து விட்டார். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளையெல்லாம் தவெகவுக்கு ஈர்த்துக்கொண்டார். அந்த கட்சிகளும் அமைச்சரவையில் சேர்ந்து அதன் ருசியை ரசிக்க ஆரம்பித்து விட்டனர். இனி, அந்த கட்சிகள் எல்லாம் திமுக கூட்டணிக்கு திரும்பும் என்பது எட்டாக்கனிதான். அதனால் திமுக தனித்து விடப்பட்டுள்ளது.
திமுகவை அழிக்க அதன் கூட்டணி கட்சிகள் களம்
அதேபோல நிலைமைதான் நமக்கும். திமுகவை அழிக்க அதன் கூட்டணி கட்சிகளைத்தான் தம் பக்கம் கொண்டு சென்றார் விஜய். ஆனால், அதிமுகவை அடியிலிருந்து அழிக்க நினைக்கிறாரோ என்னவோ. எல்லோரையும் தவெகவில் சேர்த்துக் கொண்டு வருகிறார். நம் கட்சியில் இருந்து சாரைசாரையாக தவெகவுக்கு தாவுவது நல்லதாகப்படவில்லை அண்ணே! அதிமுகவிலிருந்து தொண்டர்களை இழுத்துக்கொண்டு, 2 கோடி உறுப்பினர்களைத் தாண்டி தவெக சாதனை புரிந்துள்ளது என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
எடப்பாடி அண்ணன் கவலை
இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் மனசு கொதிக்கிறது. இதைப்பத்தி எல்லாம் எடப்பாடி அண்ணன் கவலைப்படுகிறாரா?இல்லையா? எங்களுக்கு கவலையா இருக்கு. இப்படியே போனால், கட்சியில் தலைவர்கள் மட்டும் தான் இருப்பார்கள் . சீரியஸாக யோசியுங்கள் அண்ணே. நீங்களாவது எடப்பாடியிடம் விவாதியுங்கள். நம் கண் முன்னே கட்சி காணாமல் போவதை ஜீரணிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்'' என்று கவலையுடன் பேசியிருக்கிறார்கள்.
அதைக்கேட்ட கே.பி.முனுசாமி, ''உங்க கவலையையும் வருத்தத்தையும் என்னால் புரிஞ்சிக்க முடியும். நானும் கூட அதே ஆதங்கத்தில் தான் இருக்கேன். ஏற்கனவே எடப்பாடியிடம் இதைப்பத்தி நாங்கள் பேசியிருக்கிறோம். சீக்கிரம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
தவெக மாயையில் மட்டும் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
மீண்டும் எடப்பாடியிடம் பேசுகிறேன். மத்தவர்கள் மாதிரி நீங்களும் தவெக மாயையில் மட்டும் சிக்கிக்கொள்ளாதீர்கள். அங்கு போவதால் எந்த மரியாதையும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. இப்போதைக்கு தவெக என்கிற பல்பு பிரகாசமாக எரிகிறது. அதில் மாட்டிக்கொள்ளும் விட்டில் பூச்சிகளாக நீங்கள் இருந்து விடாதீர்கள். எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். தலைவர் (எம்ஜிஆர்) உருவாக்கிய கட்சியை அழிவதற்கு விட்டுவிட மாட்டோம்'' என்று சொல்லி யுள்ளார் கே.பி.முனுசாமி.
அதிமுக மா.செ.க்கள் சிலரிடம் கே.பி. முனுசாமி கொடுத்துள்ள இந்த நம்பிக்கையான வார்த்தைகள் தான் தற்போது அதிமுகவில் சர்குலேட் ஆகி வருகிறது என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications