மாறுகிறது ரூல்ஸ்.. வீடுகளில் கிளி இருக்கா? நீங்க இதை செய்யலேன்னா, ரூ.10000 ஃபைன்.. 7 வருடம் ஜெயிலாம்
சென்னை: வீடுகளில் நாய்களை வளர்க்க உரிமம் பெறுவதை போலவே, பறவைகளை வளர்ப்போரும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கிளி ஜோதிடம் பார்ப்பது, இன்னமும் வழக்கத்தில் வருகிறது.. ஆனால், கூண்டில் கிளிகளை அடைப்பதற்கு சட்டப்படி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.. இது பொதுமக்களுக்கு மிகுந்த குழப்பத்தை தந்துவிடுகிறது.. கிளிகள் வளர்ப்பது குற்றமா? இல்லையா? என்று மக்களே குழம்பி விடுகிறார்கள்.

கிளி ஜோதிடம்: ஆனால், கிளி மட்டுமல்ல, எந்தவகையான பறவைகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் குற்றம் என்று வனத் துறையினர் கண்டிப்புடன் சொல்கிறார்கள்.. அதாவது, கடந்த 1990 - 91ல் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில், கிளிகளை வளர்ப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.. அதனால்தான், இன்னமும் நிறைய பேர் கிளிகளை வளர்த்து வருகிறார்கள்..
ஆன்லைன் மூலமும் வருடத்துக்கு 700 கிளிகள் விற்பனையாவதாக தகவல்கள் கிடைக்கின்றன.. ஒரு கிளி, 300 முதல், 500 ரூபாய் வரை ஆன்லைனில் விற்பனையாகிறதாம்..
கூண்டுக்கிளி: அதனால், விதிமுறைகள் தெரியாமல், வீடுகளில் யாராவது கிளிகளை வளர்த்தால், தாங்களாக முன்வந்து அவற்றை விடுவிக்க வேண்டும் என்றும், அதையும் மீறி வீடுகளில் வளர்த்தால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு 25,000 ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், இந்த எச்சரிக்கையை பலரும் மதிப்பதில்லை.. அதனால்தான், வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம் செய்திருக்கிறது..
அழிவின் விளிம்பு: ஏனென்றால், நம்முடைய இந்தியாவில், 1,364 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இதில், 194 வகை பறவை இனங்கள், உலக அளவில் அழியும் நிலையில் இருக்கிறதாம்.. இப்படி அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாப்பதற்காகவே, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.
இனிமேல், வெளிநாடுகளில் இருந்து பறவைகளை கொண்டு வந்து வளர்ப்பவர்களும் பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது. இதற்கான வசதி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இதற்கான வரைவு விதிகளை, தமிழக வனத்துறையும் வெளியிட்டிருக்கிறது..
பறவைகள்: இதில், பறவைகள் வளர்ப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வீடுகளில் பறவைகளுக்கு இடவசதி? உணவு, தண்ணீர் வழங்குவதற்கான வழிமுறைகள்? போன்றவை குறித்து, வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். எனவே, சட்டப்படி அனுமதிக்கப்படும் சில வகை பறவைகளை மட்டுமே வீடுகளில் வளர்க்க வேண்டும்.. அப்படியே வளர்த்தாலும், அந்த பறவைகள் குறித்த விபரங்களை, அரசுக்கு தெரிவிக்க வேண்டும்..
கிளி, மயில் உட்பட பறவைகளை வளர்ப்போர் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். பதிவின் அடிப்படையில், அவர்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கப்படும். பறவைகளை அடையாளப்படுத்த, அதன் கால்களில் மாட்டுவதற்கான வளையங்கள் வழங்கப்படும்.. இந்த வளையங்கள் வாயிலாக, பறவைகள் அடையாளப்படுத்தப்படும்.
சிறை தண்டனை: இந்த விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வரைவு விதிகள் இறுதி ஒப்புதல் பெற்ற பிறகு, இந்த விதிகள் அமலுக்கு வரப்போகிறதாம்.












Click it and Unblock the Notifications