கிளாம்பாக்கத்தை விடுங்க.. குத்தம்பாக்கத்தில் ஏர்போர்ட் ரேஞ்சுக்கு பேருந்து நிலையம்.. ஃபுல்லி ஏசி!
சென்னை: சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக புதிய பேருந்து முனையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இடநெரிசல் இருப்பதால் பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சொந்த ஊருக்கு போய் சேருவதே தாமதமாகும் நிலை இருந்து வந்தது.

இதையடுத்து பண்டிகை காலங்களில் சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதாவது மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் அவர்களின் பயண நேரம் அதிகமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இது திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
மழைநீர் வடிகால் வாரிய பணிகள் உள்ளிட்டவை நடந்து முடிந்தவுடன் பேருந்து நிலையம் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையில் பேருந்து நிலையம் முன்பே கடல் போல் தண்ணீர் தேங்கியிருந்தது. எனவே இது சரிசெய்யப்பட்ட பிறகுதான் பேருந்து நிலையம் திறக்கப்படும்.
இது ஒரு புறமிருக்க , சென்னை திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தும் இடவசதி உள்ளது.
அது மட்டுமல்லாமல் 1500 பைக்குகளும் 200 கார்களும் நிறுத்தும் அளவுக்கு மல்டி லெவல் பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. எஸ்கலேட்டர்கள், குடிநீர் வசதிகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையத்தை போல் இந்த பேருந்து முனையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் முழுவதும் ஏசி வசதி செய்யப்படுகிறது.
அது போல் இலவச வைஃபை வசதி என அனைத்து வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து ஐடி ஊழியர்கள் அதிகம் பேர் பெங்களூர் செல்வதால் இந்த பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தால் அந்த ஊழியர்களுக்கு பேரூதவியாக இருக்கும். இங்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடகா மாநில போக்குவரத்து கழகம் ஆகியவற்றின பேருந்துகள் இங்கு இயக்கப்படுகின்றன. மேலும் இங்கு உணவகங்கள், வணிக கடைகள் உள்ளிட்டவை அமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. வருங்காலத்தில் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டால் குத்தம்பாக்கம் வழியாக மெட்ரோ சேவை வர வாய்ப்புள்ளது. மேலும் பூந்தமல்லி வரை மெட்ரோ நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டதால் பேருந்து நிலைய பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்படும்.












Click it and Unblock the Notifications