சென்னையில் வீடு வாங்கறீங்களா? கோவையில் நிலத்தின் மதிப்பு பாருங்க.. தேசிய வீட்டுவசதி வங்கி அதிரடி
சென்னை: சென்னை, கோவையில் வீடுகள் புள்ளிகள் விலை உயர்ந்துள்ளன.. இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தேசிய வீட்டுவசதி வங்கி செயல்பட்டு வருகிறது.. வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக இது செயல்படுகிறது... நாடு முழுதும் வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியிலான நிதியுதவியை தேசிய வீட்டுவசதி வங்கி வழங்கி வருகிறது.

விற்பனை விலைகள்: அந்தவகையில், நாட்டிலுள்ள மொத்தம் 50 நகரங்களில் வீடுகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான விலை புள்ளி விபரங்களை, தேசிய வீட்டு வசதி வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
வீடுகளின் விற்பனை விலைகள் காலாண்டுக்கு அடிப்படையிலும் ஒப்பிடப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும் நிலையில், கடந்த மார்ச் மாதம் தேசிய வீட்டுவசதி வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், "கடந்த 2022 டிசம்பர் நிலவரத்தைவிட, 2023 டிசம்பரில் விலை புள்ளிகள் 4.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது... தமிழகத்தில் ஆண்டு மாற்றம் அடிப்படையில் கணக்கிடும்போது, சென்னையில் வீடுகளின் விலை புள்ளிகள், 3.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதே அடிப்படையில், கோவையில், ஆண்டு மாற்றம் அடிப்படையில் வீடுகளின் விலை புள்ளிகள், 5.1 சதவீதம் வரை சரிந்துள்ளன.
காலாண்டு மாற்றம்: ஆனால், காலாண்டு மாற்றம் அடிப்படையில் பார்க்கும்போது, சென்னையில், 2022 டிசம்பரில், 118 ஆக இருந்த வீடுகளின் விலை புள்ளிகள், 2023 டிசம்பரில், 123 ஆக உயர்ந்துள்ளன. கோவையில், 2022 டிசம்பர் நிலவரப்படி, 135 ஆக இருந்த வீடுகளின் விலை புள்ளிகள், 2023 டிசம்பரில், 128 ஆக உள்ளது. குறிப்பாக, காலாண்டு ஒப்பீடு அடிப்படையில், 2023 செப்டம்பர் 127 ஆக இருந்த விலை புள்ளிகள் டிசம்பரில், 128 ஆக உயர்ந்துள்ளது..
சென்னையில் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் சராசரி விலை, 2022 டிசம்பர் நிலவரப்படி, சதுர அடி, 11,301 ரூபாயாக இருந்தது. இது, 2023 டிசம்பர் இறுதியில், 11,650 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோவையில், 2022 டிசம்பர் நிலவரப்படி, சதுர அடி, 7,262 ரூபாயாக இருந்த விலை 2023 டிசம்பர் இறுதியில், சதுர அடி 8,343 ரூபாயாக உயர்ந்துள்ளது" என்று தேசிய வீட்டுவசதி வங்கி தெரிவித்திருந்தது.
வீடுகள் விலை: இந்நிலையில் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.. கடந்த மார்ச் மாத நிலவரம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "நாட்டிலுள்ள மொத்தம் 50 நகரங்களில் ஒட்டுமொத்த சராசரி அடிப்படையில், ஆண்டுக்கு ஆண்டு என்ற கணக்கில் 5.1 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 5.8 சதவீதமும் என்ற ரீதியில், வீடுகளுக்கான விலை புள்ளிகள் உயர்ந்துள்ளன.
இதில், சென்னையில் 2023 மார்ச் மாத நிலவரத்துடன் ஒப்பிடுகையில், 2024 மார்ச் மாதத்தில் 5.1 சதவீதம் அளவுக்கு வீடுகளின் விலை புள்ளிகள் உயர்ந்துள்ளன.
வீடுகளின் விலை: கோவையில் 0.6 சதவீதம் அளவுக்கு விலை புள்ளிகள் உயர்ந்துள்ளன. கடந்த 2023 டிச., இறுதியுடன் ஒப்பிடுகையில், 2024 மார்ச் இறுதியில், வீடுகளின் விலை புள்ளிகள், சென்னையில் 2.1 சதவீதம், கோவையில் 4.1 சதவீதம் உயர்ந்துள்ளன. கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் விலை, கோவையில் வேகமாக உயர்ந்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications