சுயம்பு விஜயகுமார்! ஜெராக்ஸ் கடையில் ரூ 1000 சம்பளத்திற்கு முதல் வேலை! ஐபிஎஸ் ஆக தடைகளை உடைத்த தீரன்
சென்னை: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் கோவை சரக டிஐஜி விஜயக்குமார் ஆரம்பத்தில் எங்கு வேலை செய்தார் தெரியுமா?
கோவை சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் நேற்றைய தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இழப்பு காவல் துறையினரை வேதனை அடைய செய்துள்ளது. நீதி, நேர்மை, நாணயம் என்ற 3 மந்திரங்களை மூலதனமாக வைத்திருந்தவர் விஜயகுமார்.

இவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். 1976 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் செல்லையா- ராஜாத்தி ஆகியோராவர். விஜயகுமாரின் தந்தை செல்லையா கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தாய் ராஜாத்தி அரசு பள்ளி ஆசிரியையாக இருந்தவர். விஜயகுமார் தமிழ் வழியில் பிளஸ் 2 வரை படித்தார். உயர்கல்விக்காக சென்னை வந்த அவர் பிஇ மெக்கானிக்கல் படித்தார். பின்னர் வேலை கிடைக்காத நிலையில் அவர் ஜெராக்ஸ் கடை ஒன்றில் மாதம் ரூ 1000 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.
அங்கு கிடைக்கும் பணத்தை வைத்து போட்டித் தேர்வுகளுக்கு படித்து கொண்டிருந்தார். 1999ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வு எழுதி 2000 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து உயர் அதிகாரியாக வேண்டும் என்ற உந்துதல் காரணமாக 2003 இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதினார்.
தெறி, தீரன் படங்களின் நிஜ ஹீரோ.. தற்கொலை செய்த டிஐஜி விஜயகுமாராக நடிகர் விஜய் நடித்தாரா? அதே பெயர்
இதையடுத்து அவர் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார். அப்படியும் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இரவு பகல் பாராமல் படித்துக் கொண்டே இருந்தார். முதலில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி பிறகு அவர் தோல்வி அடைந்த நிலையில் தீவிரமாக படித்தார். கடைசி முயற்சியான 7ஆவது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
ஐஏஎஸ் பணிக்கு தேர்வாகும் அளவுக்கு மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதால் ஐபிஎஸ்ஸை தேர்வு செய்தார். பின்னர் பயிற்சி எடுத்து காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சிபிசிஐடி எஸ்பியாக பணிக்கு சேர்ந்தார். சென்னை அண்ணாநகரில் துணை ஆணையராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இதைத் தொடர்ந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் பணிக்கு சேர்ந்தார். ஐபிஎஸ் படிப்பதற்கு லீவு கேட்டாலே டிரான்ஸ்பர் கிடைக்கும் என விஜயகுமார் ஒரு பதிவில் கூட தெரிவித்திருந்தார். அந்த வகையில் மிகவும் கஷ்டப்பட்டு யார் உதவியும் இல்லாமல் சுயம்புவாக அவர் காவல் துறை அதிகாரியாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications