செந்தில்பாலாஜிக்கு எத்தனையாவது முறை ஜாமின் மறுப்பு தெரியுமா? மாவட்ட நீதிமன்றம் டூ உச்சநீதிமன்றம் வரை
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடல்நிலையை காரணம் கூறி ஜாமின் கொடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காணொலி மூலம் பார்த்த நீதிபதி அல்லி 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதற்கு இடையே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்ததால் குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை மாவட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அதனைத் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். சாட்சிகளை கலைத்து விடுவார் என அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடி ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள் உள்ளதாகவும், இதயத்தில் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டது பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாத உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி ஜாமின் கொடுக்கு மறுத்திருக்கிறது.
இதுவரை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 11 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் 2 முறை ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தலா ஒரு முறை ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி 6 மாதங்களுக்கு மேலாக விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications