இவ்வளவு கோடியா! தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் மீது எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா? அதிர்ச்சி தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் ரூ.3 லட்சமாக உயர்ந்து இருப்பதாக சட்டப்பேரவை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தனது பட்ஜெட் உரையின்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் நிதிச்சுமை குறித்தும், திட்டங்களுக்காக பெறப்போகும் கடன் விபரம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

ரூ.90,116 கோடி கடன் பெற திட்டம்
தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக 2022 - 2023 நிதியாண்டில் ரூ.90,116 கோடி கடன் பெற மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் உரையில் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் தொகையின் அளவு ரூ.6.53 லட்சம் கோடி என அவர் கூறினார். இந்த கடன் நிலுவை என்பது 15 நிதிக்குழுவின் வரம்புக்குள் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் மீதான கடன் சுமை
தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை ரூ.3 லட்சமாக உயர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமை ரூ.2.63 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு குடும்பத்துக்கு ரூ.38,000 கூடுதலாக கடன் சுமை ஏற்பட்டு உள்ளது.

8 ஆண்டுகளுக்கு பின் குறையும் பற்றாக்குறை
பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை குறித்து பேசிய அவர், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 3.8% குறைய இருப்பதாக தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை கணிசமான அளவு உயர்ந்து வந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் இம்முறை வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டினார்.

பிடிஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டின் நிதிச்சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்த இருந்த தமிழ்நாடு அரசின் கடன் சுமை, 2021 ஆம் ஆண்டு ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது எனக் கூறினார்.

2021-22 இடைக்கால பட்ஜெட்
கடந்த ஆண்டு பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.5,70,189 கோடி எனவும், தமிழ்நாட்டின் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமையும் இருந்தது. 2014 - 15 நிதியாண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன் சுமை ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அதிகரித்தது என கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications