மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ரூ 25 ஆயிரம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன?
சென்னை: மத்திய அரசு வழங்கும் ரூ 25 ஆயிரம் கல்வி உதவித் தொகையை எப்படி பெறலாம், யார் யார் பெறலாம் என்பதற்கான விவரங்களை பார்க்கலாம். அது போல் வரும் நிதியாண்டான 2024- 2025-க்கு எப்படி கல்வி உதவித் தொகையை விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2024- 2025ஆம் நிதியாண்டில் ரூ 1000 முதல் ரூ 25 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: https://scholarships.gov.in என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில் தங்களுடைய சேமிப்புக்கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வேளை கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல் அடுத்த கட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2024 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2024 ஆகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications