ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து போய்விட்டதா? மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும்?
சென்னை: ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், கல்வி ஆவணங்கள் தொலைந்துவிட்டால் அவற்றை எப்படி பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கான ஆவணங்கள், எவ்வளவு கட்டணம் என்ற முழு விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுயதொழில் அறிவோம் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: #டிரைவிங்__லைசென்ஸ் தொலைந்தால் யாரை அணுகுவது...? மாவட்டப் போக்குவரத்து அதிகாரியை அணுக வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்...?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
அது போல் ரேஷன் கார்டு தொலைந்தால் யாரை அணுகுவது...? என்ற சந்தேகம் பலருக்கு எழும். ஒரு வேளை உங்கள் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், கிராமப் புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்,நகர்ப் பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை.
எவ்வளவு கட்டணம்? புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
கல்வி மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் யாரை அணுகுவது...? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுக வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்...? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு (+2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை' என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை இவை தொலைந்துவிட்டால் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அவற்றை பெற்றுக் கொள்ளலாம். தற்போது அனைத்து பணிகளும் மக்களுக்காக எளிதாக்கப்பட்டுள்ளன. மேலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலும் ஆவணங்கள் விரைந்து கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications