நீல நிற சட்டை.. லேசான தாடி.. கவலை தோய்ந்த முகம்.. ED ஆபீஸில் செந்தில் பாலாஜியின் முதல் நாள் எப்படி?
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜியிடம் முதல் நாளில் என்னென்ன மாதிரியான விசாரணை நடந்தது தெரியுமா?
போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என அவரது மனைவி ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது. அவர் செந்தில் பாலாஜி தனது மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். அவரது கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேல்முறையீடு செய்தார்.
அது போல் அமலாக்கத் துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முகுல் ரோத்தகியும் அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன் வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது முக்கியமானது என அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்படி சரியானது. அமலாக்கத் துறை அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர். இதையடுத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத் துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்றைய தினம் புழல் சிறைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு நீதிபதி அல்லியின் உத்தரவு கடிதத்தை வழங்கினர். இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவரிடம் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அமலாக்கத் துறை சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை அடிப்படையாக வைத்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஓய்வெடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் இன்று காலை 6 மணிக்கு விசாரணை தொடங்கியதாக தெரிகிறது. அமலாக்கத் துறை கைது செய்த போது கருப்பு நிற சட்டை அணிந்திருந்த செந்தில் பாலாஜி நேற்றைய தினம் லேசான தாடியுடன் நீல நிற சட்டையில் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications