இந்திய சுதந்திர போராட்டத்தை புரட்டி போட்ட விஷயம்.. விதை போட்டதே நம்ம சென்னை தான் தெரியுமா
சென்னை: வரும் வியாழக்கிழமை நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம். இந்த சுதந்திரப் போராட்டத்திற்கும் சென்னையின் இதய பகுதியில் இருக்கும் சாலைக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. வாங்க இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை வரும் வியாழக்கிழமை கொண்டாட இருக்கிறோம். நாம் இன்று எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்க பலர் தங்கள் செல்வம், சொத்து, உயிர்களையும் தியாகம் செய்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

நமது சென்னை, அதாவது அப்போதைய மெட்ராஸில் பல சுதந்திரப் போராட்டங்கள் நடந்துள்ளன. சுதந்திரப் போராட்டத்தின் பல அடையாளங்களை நம்ம மெட்ராஸ் சுமந்து நிற்கிறது
கதீட்ரல் சாலை: அதில் முக்கியமானது தான் கதீட்ரல் ரோடு.. சென்னை கடற்கரையில் இருந்து நீங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வந்தால் இருப்பது தான் இந்த கதீட்ரல் சாலை.. நகரின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்று இந்த கதீட்ரல் ரோடு.. மெரீனா கடற்கரையை அண்ணா சாலையுடன் இணைக்கும் இந்த சாலையில் தான் அமெரிக்கத் தூதரகம் இருக்கிறது. மேலும், தென் இந்தியத் திருச்சபை இருப்பதும் இங்கே தான் செம்மொழி பூங்கா இருப்பதும் இங்கே தான். எனவே பலருக்கும் இந்த சாலை குறித்துத் தெரிந்து இருக்கும்.

ஆனால், இந்த சாலைக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் மிக முக்கிய தொடர்பு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து நாம் பார்க்கலாம். இந்த சாலையில் தான் நமது இரண்டாவது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் இல்லம் அமைந்துள்ளது. அதை விட முக்கியமாக நமது நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலும், முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் இல்லம் இங்கே தான் இருந்தது.
எங்கே இருக்கிறது: ராஜாஜி வீடா அதைப் பார்த்ததே இல்லையே என நீங்கள் சொல்லலாம். ஜெமினி பாலம் நோக்கி வரும் போது கதீட்ரல் பாலத்தைத் தாண்டியதும் இடது பக்கம் பிரபல வெல்கம் ஹோட்டல் இருக்குமே, அதுதான் ராஜாஜி தங்கியிருந்த திலகர் பவனம். ராஜாஜி வாழ்ந்த இந்த இடத்தில் தான் இப்போது ஹோட்டல் கட்டியுள்ளனர். இந்த ராஜாஜியின் இல்லத்திற்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு: முதலாம் உலகப் போர் முடிந்த மறு ஆண்டு அதாவது 1919இல் காந்தி அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் இந்த ராஜாஜியின் இல்லத்தில் தான் தங்கினார். நமது முண்டாசுக்கவி பாரதியும், காந்தியும் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளனர். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு இந்த கதீட்ரல் சாலையில் உள்ள திலகர் பவனத்தில் தான் நடந்துள்ளது. மகாகவி பாரதியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவரது இயக்கத்தையும் காந்தி பாராட்டி இருக்கிறார்.
பாரதியாருடன் பேசும் போதே அவரது ஆற்றலைக் கண்டு வியந்த காந்தி அவர் சென்றவுடன் ராஜாஜியிடம் யார் அவர் என விசாரித்துள்ளார். பாரதியார் பற்றி ராஜாஜி கூறியவுடன், "அவரை பாதுகாக்க வேண்டும்" எனக் காந்தி சொன்னாராம்.

மேலும், இந்த கதீட்ரல் சாலையில் வெல்கம் ஹோட்டலின் நுழைவு வாயில் அருகே ஒரு கல்வெட்டு இருக்கும். அதைக் கொஞ்சம் படித்துப் பார்த்தால் நமது சுதந்திரப் போராட்டத்தை புரட்டிப் போட்ட விஷயத்திற்குத் தொடக்கமே இங்கு தான் என்பது தெரிய வரும்.

சத்தியாகிரகம்: அதாவது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரிட்டிஷ் அரசு தங்கள் பிடியை இறுக்கும் வகையில் இந்த 1919இல் தான் ரௌலட் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை எத்தனை காலம் வேண்டும் என்றாலும் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்க முடியும்.

ராஜாஜியின் இந்த திலகர் பவனத்தில் இருந்த போது தான் காந்தி இந்த சட்டம் குறித்துத் தெரிந்து கொண்டார். இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இந்த ஒத்துழையாமை இயக்கம் குறித்த சிந்தனை காந்திக்கு இங்கு இருந்த போது தான் ஏற்பட்டுள்ளது.
இந்தளவுக்குச் சென்னையில் நாம் அன்றாடம் கடந்து செல்லும் கதீட்ரல் சாலைக்குப் பின்னால் மிக முக்கிய சுதந்திரப் போராட்ட வரலாறு இருக்கிறது. இந்த ஒரு சாலை மட்டுமில்லை.. சென்னையில் இருக்கும் பல சாலைகள், இடங்கள், பகுதிகளுக்குச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.













Click it and Unblock the Notifications